மதுரை, பிப்.28: கோர்ட் வாய்தாவுக்கு சென்று திரும்பிய விசாரணை கைதி, நெஞ்சு வலியால் உயிரிழந்தார். மதுரை கோமதிபுரத்தை சேர்ந்தவர் மோகன்காந்தி. இவர் மீது அண்ணாநகர் காவல் நிலையத்தில் மோசடி வழக்கு உள்ளது. இவ்வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட மோகன்காந்தி, விசாரணை கைதியாக, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், இவரை நேற்று மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் வாய்தாவுக்கு ஆஜர்படுத்த கரிமேடு போலீசார் கொண்டு வந்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விட்டு, மீண்டும் சிறையில் அடைப்பதற்காக போலீசார், மத்திய சிறைக்கு கொண்டு சென்றனர். அப்போது, மோகன்காந்தி, தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறினார். அவரை, மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். ஆனால், வரும் வழியில் மோகன்காந்தி உயிரிழந்தார். இது குறித்து, கரிமேடு போலீசார் வழக்குப்பதிந்து, விசாரித்து வருகின்றனர். இறந்த மோகன்காந்திக்கு மனைவி மற்றும் அக்காள் உள்ளனர்.