சென்னை: விபத்தில் 2 பேர் இறந்ததை கண்டித்து பொதுமக்கள் கல் குவாரி லாரிகளை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். கல்பாக்கம் அருகே கூவத்தூரில் இருந்து பவுஞ்சூர் நோக்கி நேற்று முன்தினம் மதியம் ஒரு ஷேர் ஆட்டோ புறப்பட்டது. டிரைவர் செல்வம் (28) ஆட்டோவை ஓட்டினார். அதில், ஜல்லிமேடு பகுதியை சேர்ந்த தணிகைவேல் (33) உள்பட 5 பேர் பயணம் செய்தனர். கிழக்கு கடற்கரை சாலை கண்டிகை அருகே சென்றபோது, எதிரே கல்குவாரியில் இருந்து ஜல்லி கற்களை ஏற்றிக் கொண்டு வேகமாக வந்த ஒரு லாரி, ஆட்டோ மீது நேருக்கு நேர் மோதியது. இதில் டிரைவர் செல்வம், பயணி தணிகைவேல் ஆகியோர் பலியாகினர். இதை பார்த்ததும், லாரி டிரைவர் அங்கிருந்து தப்பினார். புகாரின்பேரில், அணைக்கட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். இந்நிலையில், பெண்கள் உள்பட 200க்கும் மேற்பட்டோர் நேற்று காலை கூவத்தூர் - பவுஞ்சூர் நெடுஞ்சாலை, நெல்வாய்பாளையம் கூட்ரோட்டில் திரண்டு, அவ்வழியே வந்த கல்குவாரி லாரிகளை சிறைபிடித்து, மறியலில் ஈடுபட்டனர். அப்போது, லாரி மோதி 2 பேர் இறந்ததை கண்டித்தும், பவுஞ்சூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் இயங்கும் கல்குவாரிகளை மூட வலியுறுத்தியும் கோஷமிட்டனர். இதனால், அங்கு போக்குவரத்து நெரிசல் மற்றும் பரபரப்பு நிலவியது.