×

பெரம்பலூர் மாவட்டத்தில் 4 இடங்களில் அரசின் சிறப்பு திட்ட முகாம்

பெரம்பலூர், பிப். 28: பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று 4 இடங்களில் சிறப்பு திட்ட முகாம் நடக்கிறது.
இதுகுறித்து பெரம்பலூர் கலெக்டர் சாந்தா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அனைத்து கிராமங்களுக்கும் அடிப்படை தேவைகளை நிறைவேற்ற தமிழக அரசால் சிறப்பு திட்ட முகாம்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்படி வருவாய் வட்டாட்சியர் தலைமையில் வருவாய்த்துறை அலுவலர்கள் பொதுமக்களை தேடி சென்று அவர்களின் குறைகளை தீர்க்கும் வகையில் சிறப்பு திட்ட முகாம்கள் நடத்தப்படுகிறது.இந்த முகாம்களில் மக்கள் அளிக்கும் பட்டா மாறுதல் (உட்பிரிவு இல்லாத இனங்கள்), சிட்டா நகல், ஆதார் அட்டைகள் பெற பதிவு செய்தல், குடும்ப அட்டைகளில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள், பிறப்பு இறப்பு சான்றிதழ், சாதி சான்றிதழ், வருமானம் மற்றும் இருப்பிட சான்றிதழ், வாரிசுரிமை சான்றிதழ், சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கான சான்றிதழ்.

முதல் பட்டதாரி அல்லது குடும்பத்தில் பட்டதாரி இல்லை என்பதற்கான சான்றிதழ், ஆண் வாரிசு இல்லை என்ற சான்றிதழ், குடும்பத்தில் இருபெண் குழந்தைகள் மட்டும் உள்ளதற்கான சான்றிதழ், முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட உதவித்தொகை கோரும் மனுக்கள், உழவர் பாதுகாப்பு திட்டத்தின் உதவிகள் பெற சமர்பிக்கப்படும் மனுக்கள், முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின்கீழ் புதிய உறுப்பினர் சேர்த்தல், துயர்துடைப்பு மற்றும் விபத்து நிவாரணம் கோரும் மனுக்கள் மீதான அறிக்கை, மேலும் ஒரே நாளில் தீர்வு காணக்கூடிய இதர மனுக்கள் மீது ஆணை பிறப்பித்தல் ஆகியவை அன்றைய தினமே பரிசீலிக்கப்பட்டு உரிய ஆணைகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.அதன்படி இன்று (28ம் தேதி) பெரம்பலூர் தாலுகாவில் களரம்பட்டி, வேப்பந்தட்டை தாலுகாவில் பசும்பலூர் (தெற்கு), குன்னம் தாலுகாவில் எழுமூர் (மேற்கு) மற்றும் ஆலத்தூர் தாலுகாவில் அயினாபுரம் ஆகிய கிராமங்களில் சிறப்பு திட்ட முகாம்கள் நடக்கிறது. இவ்வாறு பெரம்பலூர் கலெக்டர் சாந்தா தெரிவித்துள்ளார்.



Tags : Government ,locations ,district ,Special Project Camp ,Perambalur ,
× RELATED உத்தரப்பிரதேசம், மும்பை, டெல்லியில் 13 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை!!