கரூர், பிப். 28: தாதம்பாளையம் ஏரிக்கு உபரிநீர் கொண்டு வரும் திட்டம் நிறைவேற்றப்படாததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.கரூர் மாவட்டம் சின்னதாராபுரம் அருகே தாதம்பாளையத்தில் 300 ஏக்கர் பரப்பரளவில் ஏரி அமைந்திருக்கிறது. இந்த ஏரிக்கு அமராவதி ஆற்றில் இருந்து மழைக்காலங்களில் வரும் உபரி நீர் சென்றடையும் வகையில் வாய்க்கால் இருந்தது. கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக அமராவதி ஆற்றில் நீர் வரத்தில்லை. மேலும் பருவ மழைக்காலங்களில் வரும் நீரையும் திருப்பூர் மாவட்டமே பயன்படுத்திக்கொள்ளும் போக்கு தொடர்கிறது. கரூர் மாவட்டத்திற்கு உரிய நீர் கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு கடந்த 10 ஆண்டுகளாகவே விவசாயிகளால் தொடர்ந்து கூறப்பட்டு வருகிறது.அணைப்புதூர் தடுப்பணையில் இருந்து உபரிநீரை தாதம்பாளையம் ஏரிக்கு கொண்டு வரும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பது விவசாயிகளின் நீண்டகால கோரிக்கை.இந்த திட்டத்தை நிறைவேற்றினால் 3ஆயிரம் ஏக்கருக்கும் மேல் பாசன நிலங்கள் பயன்பெறும். நிலத்தடிநீர் மட்டமும் உயரும். எனினும் திட்டத்தை அரசு கண்டுகொள்ளவில்லை.
இதுகுறித்து தொடர்ந்து போராடிவரும் விவசாயிகள் கூறியது: தாதம்பாளையம் ஏரிக்கு உபரிநீர் கொண்டு வரும் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி வருகிறோம். கடந்த 9 ஆண்டாக அதிமுக ஆட்சிதான் நடக்கிறது. பலமுறை வலியுறுத்தியும் அரசு கண்டுகொள்ளவில்லை. ஆளும் தரப்பில் ஆய்வு அறிக்கை என ஏட்டளவிலேயே இருக்கிறது. இதுபோன்ற ஒரு திட்டம் இருப்பது தெரியாமலேயே மத்திய அரசு இருக்கிறது.கடந்த ஆண்டு முன்னர் அமராவதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 30 ஆயிரம் கனஅடி வரை தண்ணீர் வந்தும் பயன்படுத்த முடியாமல் காவிரியில் கலந்தது. காவிரியில் ஏற்கனவே கர்நாடகாவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக வந்த பெருவெள்ளத்தோடு இந்த நீரும் கலந்து வீணாக கடலில் போய் கலந்து விட்டது. தேர்தல் கால வாக்குறுதியாகவே தாதம்பாளையம் ஏரித்திட்டம் இருக்கிறது. தொடர்ந்து வலியுறுத்தியும் தேர்தல் காலங்களில் மட்டும் பேசுபொருளாக இருக்கிறது. மற்றபடி திட்டத்தை நிறைவேற்றவோ நிதிஒதுக்கீடு செய்யவோ எந்த நடவடிக்கையும் இல்லை. இதற்கான இடமானது மத்திய அரசிடம் இருப்பதாகவும் அதனை மாநில அரசுக்கு மாற்றி அனுமதி அளிக்க வேண்டும் எனதெரிவிக்கின்றனர். இதுதான் முதல் நடவடிக்கை இதனையே இன்னும்
செய்யாமல் இருப்பதாக தெரிவித்தனர்.