×

குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து 3வது நாளாக பெண்கள் தர்ணா போராட்டம்

மயிலாடுதுறை,பிப்.28: குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து 3வது நாளாக பெண்கள் தர்ணா போராட்டம் நடந்தது. கடந்த 2 நாட்களாக நடந்த போராட்டத்தில் பங்கேற்றவர்களில் 40 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.நாகை மாவட்டம் மயிலாடுதுறை கூறைநாடு சின்ன பள்ளிவாசல் தெருவில், இந்திய குடியுரிமை திருத்த சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த மாட்டோம் என சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி இஸ்லாமிய பெண்கள் தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். கடந்த 3 தினங்களாக இரவு பகலில் ஈடுபட்டு வருகின்றனர். நாகை வடக்கு மாவட்ட அனைத்து முஸ்லிம் ஜமாத் கூட்டமைப்பு சார்பில் ‘மயிலாடுதுறை ஷாஹின் பாக்’ என தலைப்பிட்டு நடத்தப்படும் இந்த தொடர் போராட்டத்தில் கலந்து கொண்ட திருச்சம்பள்ளி ஷாஜகான், முகமதுரபீக், முகமதுஅலி, முகமது சபீக், மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் உட்பட 25பேர் மீது மயிலாடுதுறை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதே போன்று நேற்றுமுன்தினம் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற 15 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவுசெய்தனர். நேற்று நடைபெற்ற போராட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன முழுக்கங்களை எழுப்பினர், சீனிவாசபுரம் ஜமாஅத் உபயதுலலா, மீத்தேன்திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன், ஒய்எம்ஜே மாநில துணைபொதுசெயலாளர் இமாம்அலி உட்பட பலர் உரையாற்றினர். 3ம் நாளும் இந்த போராட்டம் தொடர்ந்தது.



Tags : Dharna ,
× RELATED இன்சூரன்ஸ் ஊழியர்கள் தர்ணா போராட்டம்