எரிவாயு குழாய் பதிப்பதற்காக விளைநிலங்களை அளக்க வந்த ஐஓசிஎல் வாகனம் சிறைபிடிப்பு

புதுக்கோட்டை, பிப்.28:புதுக்கோட்டை அருகே விளைநிலங்களில் அத்துமீறி நுழைந்து எரிவாயு குழாய் பதிக்க நிலங்களை அளவீடு செய்ய வந்த ஐஓசிஎல் ஊழியர்கள், ஒப்பந்த ஊழியர்கள் வாகனத்தை விவசாயிகள் சிறைபிடித்தனர்.புதுக்கோட்டை அருகேயுள்ள குலையன்கரிசல், பொட்டல்காட்டில் விவசாய நிலங்களில் நெல், வாழை பயிரிடப்பட்டுள்ளது. இங்கு விளைநிலங்களில் எரிவாயு குழாய் பதிக்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று மாலை ஐஒசிஎல் நிறுவன ஊழியர்கள், ஒப்பந்தக்காரர்களின் ஊழியர்கள் அறுவடைக்கு சில வாரங்களே நிலையில் உள்ள நெல் பயிரிட்டுள்ள விளைநிலங்களுக்குள் இறங்கி அளவீடு செய்ய முயற்சி செய்தனர்.

இதையறிந்த குலையன்கரிசல், பொட்டல்காடு விவசாயிகள் திரண்டு வந்து  ஐஒசிஎல் ஊழியர்கள், ஒப்பந்தகார ஊழியர்கள் வந்த வாகனங்களை சிறைபிடித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.தகவலறிந்த தூத்துக்குடி தாசில்தார் செல்வக்குமார், ஐஒசிஎல் அதிகாரி முருகேசன், புதுக்கோட்டை இன்ஸ்பெக்டர் முத்துபாண்டி, எஸ்ஐ சந்திரமூர்த்தி மற்றும் போலீசார் அங்கு வந்து விவசாயிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர். அதற்கு விவசாயிகள் மறுப்பு தெரிவித்தனர். மாவட்ட கலெக்டர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தினால் மட்டுமே வருவோம் என்று விவசாயிகள் திட்டவட்டமாக தெரிவித்தனர். அதிகாரிகள் அதற்கு ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தனர். அதன்பிறகு விவசாயிகள் களைந்து சென்றனர்.

Related Stories: