திருச்சி, பிப்.27: திருச்சி மாநகராட்சி உள்ளாட்சி தேர்தல்-2020க்கான மறுவரையறை செய்யப்பட்ட வார்டுகளுக்கான வரைவு வாக்குச்சாவடி பட்டியலை மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் நேற்று மாநகராட்சி மைய அலுவலகத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வெளியிட்டார்.அதன்படி ரங்கம், அரியமங்கலம், பொன்மலை மற்றும் கோ-அபிஷேகபுரம் கோட்ட அலுவலகங்களில் உதவி ஆணையர்கள் மூலம் பொதுமக்கள் பார்வைக்கு வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியிடப்பட்டது. திருச்சி மாநகராட்சி வார்டு 1 முதல் 65 வரை மறுவரையறை செய்யப்பட்ட வார்டுகளில் மொத்தம் 771 வாக்குச்சாவடிகள் உள்ளன. வாக்காளர்கள் மொத்தம் 7,59,284 உள்ளார்கள். ஆண் வாக்காளர்கள் 3,68,806, பெண் வாக்காளர்கள் 3,90,380, திருநங்கைகள் 89 என வாக்காளர்கள் உள்ளனர் என விபர பட்டியலை ஆணையர் சிவசுப்பிரமணியன் தெரிவித்தார். வாக்குச்சாவடி பட்டியல் வெளியிடும்போது உதவி ஆணையர்கள் சண்முகம், திருஞானம், வைத்தியநாதன் மற்றும் மாநகராட்சி நிர்வாக அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.