லால்குடி, பிப்.27: லால்குடி அருகே குமுளூர் அரசு கலைக்கல்லூரியில் புதிய விரிவுரையாளர்களை நியமனம் செய்ததால் தொடர்ந்து பணியாற்றி வந்த கவுரவ விரிவுரையாளர்கள் வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.லால்குடி அருகே குமுளூர் அரசு கலைக்கல்லூரி கடந்த 2008ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு கவுரவ விரிவுரையாளர்களை கொண்டு கல்லூரியை நடத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த 2018ம் ஆண்டு 110 விதியின் கீழ் அரசு கலைக்கல்லூரியாக மாற்றம் செய்து அறிவித்திருந்தனர்.
இது தமிழகத்தில் உள்ள 41 கல்லூரிகளில் அடங்கும். 2019 பிப்ரவரியில் 14 உறுப்பு கல்லூரிகள் அரசு கல்லூரிகளாக மாற்றம் செய்யப்பட்டு அறிவிப்பு வந்தது. இதில் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரியான லால்குடி, பெரம்பலூர், ஒரத்தநாடு, அறந்தாங்கி, ஆகிய கல்லூரிகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது லால்குடி அரசு கலைக்கல்லூரியில் 41 கவுரவ விரிவுரையாளர் 13 அலுவலக பணியாளர்கள் தற்காலிக அடிப்படையில் குறைந்த ஊதியத்தில் 10 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இருந்த உபரி ஆசிரியர்களை குமுளூர் அரசு கலைக்கல்லூரியில் மாற்று பணியில் அமர்த்த பல்கலைக்கழக இயக்குனர் அறிவித்துள்ளார். எனவே தற்போது பணிபுரிந்து வரும் கவுரவ விரிவுரையாளர்கள் மற்றும் பணியாளர்களின் நிலை கேள்விக்குள்ளாகி வருகிறது.
தொடர்ந்து இக்கல்லூரியில் பணியாற்றி வரும் விரிவுரையாளர்களையும் மற்றும் பணியாளர்களையும் நிரந்தர பணி வழங்கி ஆணை வழங்க வேண்டும் என உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.