குடியாத்தத்தில் மரக்கடையில் ரூ.1.50 லட்சம் ரொக்கம் திருட்டு

குடியாத்தம் பிப். 27: குடியாத்தம் நடுபேட்டை பகுதியை சேர்ந்தவர் கணேஷ், இவர் குடியாத்தம் அஞ்சுமன் தெருவில் மரக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு வழக்கம்போல் மரக்கடையை பூட்டிக்கொண்டு வீட்டிற்கு சென்றார். பின்னர் நேற்று காலை மீண்டும் கடை திறக்க வந்தார். அப்போது கடையின் கதவு திறந்திருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து, உள்ளே சென்று பார்த்தபோது கடையின் உள்ளே இருந்த அலுவலக கதவின் கண்ணாடி உடைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. பின்னர் அலுவலக அறையில் பார்த்தபோது அங்கிருந்த ₹1.50 லட்சம் ரொக்கம் திருடு போயிருந்தது தெரிய வந்தது.

இதுகுறித்து குடியாத்தம் டவுன் குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சியினை ஆய்வு செய்தனர். அதில் பதிவாகி இருந்த காட்சிகளை வைத்து குற்றவாளியை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories: