ஓமலூர், பிப். 27: சேலம் பெரியார் பல்கலைக்கழக பொருளியல் துறை சார்பில், சிறப்பு பொருளாதார கருத்தரங்கம் நடைபெற்றது. சேலம் தொழிலதிபர் ராஜாமணி அறக்கட்டளை சார்பில், ஆண்டுதோறும் முதுகலையில் முதலாவதாக வரும் மாணவ, மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழாவின்போது தங்கப்பதக்கமும், பொருளியல் அறிஞர்களை கொண்டு சிறப்பு சொற்பொழிவும் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது 12வது சொற்பொழிவு நடைபெற்றது. இதில் கோவை பி.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி பேராசிரியர் நாகராஜன் கலந்து கொண்டு, இன்றைய சூழ்நிலையில் இந்தியா மற்றும் பன்னாட்டு அரசுகள் சந்திக்கும் முக்கிய பொருளாதார பிரச்னைகள், அதை தீர்க்கும் வழிமுறைகள் குறித்து பேசினார்.
பல்கலைக்கழக துணைவேந்தர் குழந்தைவேல், பொருளாதாரம் பயில்வதால் ஏற்படும் பல்வேறு நன்மைகள், வேலை வாய்ப்புகள் குறித்து பட்டியலிட்டவர், பொருளாதார பட்டயம் வேலைவாய்ப்பை பெற்றுத் தரும் என்றார். துறைத்தலைவர் ஜெயராமன், டீன் பெரியசாமி, பேராசிரியர்கள் ஜனகன், வைத்தியநாதன் மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள், வணிகவியல் துறை மாணவர்கள் கலந்து கொண்டனர். அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் சுகிர்தா ராணி ஆய்வு கட்டுரைகளை ஒருங்கிணைத்தார்.