×

அய்யா வைகுண்டர் அவதார தினம் நாகர்கோவிலில் இருந்து சாமிதோப்புக்கு ஊர்வலம்

தென்தாமரைகுளம்.பிப்.27: அய்யா வைகுண்டர் அவதார தினமான மார்ச் 3 தேதி நாகர்கோவிலில் இருந்து சாமிதோப்புக்கு மாசி ஊர்வலம் நடக்கிறது.
அய்யா  வைகுண்டசாமியின் அவதார தின விழாவை முன்னிட்டு மார்ச் 2ம் தேதி காலை 9 மணிக்கு  திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் வடக்கு வாசலில் இருந்து வாகன பேரணி  நாகர்கோவிலை நோக்கிப் புறப்படுகிறது. திருவனந்தபுரம், பாறசாலை, குழித்துறை,  தக்கலை, வெட்டூர்ணிமடம் வழியாக இரவு நாகராஜா கோயில் திடலை வந்தடைகிறது.  பேரணிக்கு பால. லோகாதிபதி தலைமை வகிக்கிறார். அதே நாளில் அதிகாலை 6  மணிக்கு திருச்செந்தூர் அவதார பதியில் இருந்து நாகர்கோவிலை நோக்கி மற்றொரு  வாகன பேரணி புறப்படுகிறது. சீர்காய்ச்சி, திசையன்விளை, உடன்குடி,  கூடன்குளம், செட்டிகுளம், அம்பலவாணபுரம், ஆரல்வாய்மொழி வழியாக நாகர்கோவில்  நாகராஜா கோயில் திடலை வந்தடைகிறது. இந்த பேரணிக்கு  வக்கீல் யுகேந்த்  தலைமை வகிக்கிறார்.

அதைத் தொடர்ந்து இரவு நாகராஜா கோயில் திருமண  மண்டபத்தில் அய்யாவழி சமய மாநாடு நடக்கிறது. மாநாட்டில்  அய்யா வழி  பிரமுகர்கள், அய்யா வைகுண்டர் அறநெறி பரிபாலன அறக்கட்டளை நிர்வாகிகள் உள்பட  பலர் பங்கேற்று பேசுகின்றனர். இதற்கிடையே மார்ச் மாதம் 2ம்  தேதி பிற்பகல் 3 மணிக்கு சாமிதோப்பு தலைமைப் பதி முன்பு  இருந்து மகாதீபம்  ஊர்வலமாக கொண்டுசென்று ஆதலவிளை வைகுண்ட மாமலையில்  தீபம் ஏற்றப்படுகிறது.  இந்த நிகழ்ச்சிக்கு பையன் கிருஷ்ணராஜ்  தலைமை வகிக்கிறார்.பின்னர்  3ம் தேதி (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 5 மணிக்கு நாகர்கோவில்  நாகராஜா  திடலில் இருந்து சாமிதோப்பு  தலைமைப்பதியை நோக்கி அய்யாவழி பக்தர்கள்  கலந்து கொள்ளும் மாசி ஊர்வலம் புறப்படுகிறது. ஊர்வலத்திற்கு பால. ஜனாதிபதி  தலைமை வகிக்கிறார். ராஜவேல் முன்னிலை வகிக்கிறார். கோட்டார், சுசீந்திரம்  ஈத்தங்காடு, வடக்குத்தாமரை குளம் வழியாக சாமிதோப்பு தலைமைப் பதியை  வந்தடைகிறது.  தொடர்ந்து அய்யாவுக்கு பணிவிடை நடக்கிறது.  அன்று இரவு சாமிதோப்பு கலையரங்கில் கருத்தரங்கம் நடக்கிறது.  நிகழ்ச்சியில் அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற  மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது.

Tags : Ayya Vaikundar Avatar Day ,Nagercoil ,
× RELATED அய்யா வைகுண்டர் அவதார தினவிழா: அம்பையில் மாசி மகா ஊர்வலம்