திண்டுக்கல், பிப். 27: மதுரை கோ. புதூரில் அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் தொழிற்பழகுநர் பயிற்சி முகாம் நாளை நடைபெறவுள்ளது. தகுதியுள்ளவர்கள் பங்கேற்கலாம் என கலெக்டர் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.தமிழ்நாடு அரசு, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பாக தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் மதுரை, புதூரில் அமைந்துள்ள அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் நாளை (பிப்.28ம் தேதி) காலை 9 மணி முதல் நடைபெறவுள்ளது.இம்முகாமில் மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரத்திலுள்ள அரசு மற்றும் தனியார் முன்னணி தொழில் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான தொழிற்பிரிவுகளில் தொழிற்பழகுநர் பயிற்சி வழங்க தேர்வு செய்யவுள்ளனர். மேலும், பாரத மிகுமின் நிறுவனம், இந்திய விமான நிறுவனம் போன்ற மத்திய அரசின் நிறுவனங்கள் மற்றும் ரானே (பி) லிட்., டிவிஎஸ், ஜெ.கே.பென்னர் இந்தியா லிட்., ஹைடெக் அராய், அசோக் லேலண்ட், டைட்டன் ஹீண்டாய், லட்சுமி மிஷின் ஒர்க்ஸ், டிவிஎஸ் மோட்டார் கம்பெனி லிட் போன்ற 100க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொண்டு 1800க்கும் மேற்பட்ட தொழிற்பழகுநர் இடங்களை பூர்த்தி செய்ய உள்ளனர். இதில் ஐ.டி.ஐ., பயின்றவர்கள், எட்டாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் கல்வி தகுதியுடையவர்களும் கலந்து கொண்டு பயனடையலாம். தற்போது தொழிற்பழகுநராக சேர்க்கை செய்யப்படும் பயிற்சியாளர்களுக்கு மாதாந்திர உதவித்தொகையாக குறைந்தபட்சம் ரூ.8,000 முதல் ரூ.16,500 வரை வழங்கப்படும்.