சித்தரேவு- பெரும்பாறை இடையே கிடப்பிலே கிடக்கும் சாலை பணி பொதுமக்கள் புலம்பல்

பட்டிவீரன்பட்டி, பிப். 27: சித்தரேவு- பெரும்பாறை இடையே கிடப்பில் கிடக்கும் சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பட்டிவீரன்பட்டி அருகே சித்தரேவு- பெரும்பாறை மலைச்சாலை 15 கிமீ தூரமுள்ளதாகும். இந்த சாலையில் பல ஆபத்தான பள்ளத்தாக்குகளும், வளைவுகளும் உள்ளன. இந்த குறுகிய ரோட்டை அகலப்படுத்த நீண்டகாலமாக கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை ஒருவழியாக ஏற்று ஆத்தூர் நெடுஞ்சாலைத்துறையினர் கடந்த ஆண்டு சித்தரேவு- புல்லாவெளி இடையே உள்ள 12 கிமீ தூரமுள்ள ரோட்டை அகலப்படுத்த முடிவு செய்தனர். தொடர்ந்து தற்போதுள்ள ரோட்டின் அகலத்திலிருந்து 1 மீட்டர் அகலப்படுத்தி 2 பெரிய பாலங்கள் மற்றும் 33 சிறிய பாலங்கள் என ரூ.6 கோடியை 50 லட்சம் செலவில் புதுப்பிக்கும் பணிகளை துவக்கினர்.

ஆரம்பத்தில் வேகமாக நடந்த இப்பணிகள் நாளைடைவில் மந்தமாகி தற்போது ஆமைவேகத்தில் நடந்து வருகிறது. சாலையின் பெரும்பாலான இடங்களில் பாலம் அமைக்கும் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இதனால் இப்பணிக்காக கொண்டு வரப்பட்ட சிமெண்ட் குழாய்கள் சாலையோரம் கேட்பாரற்று கிடக்கின்றன. ஏற்கனவே சாலை குறுகலாக உள்ள நிலையில் தற்போது இந்த சிமெண்ட் குழாய்களால் மேலும் குறுகலாகி போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது. மேலும் சாலையின் பல இடங்கள் குண்டும், குழியுமாக காட்சியளிக்கின்றன. இந்த குறுகிய ரோட்டில்தான் பட்டிவீரன்பட்டி அருகேயுள்ள 10க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாய கூலித்தொழிலாளர்கள், விவசாயிகள், அரசு ஊழியர்கள் என பலர் தினந்தோறும் நிலப்பகுதியில் இருந்து பஸ், லாரி, கார், டூவீலர் மூலம் மலைப்பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். இதேபோல் இந்த ரோடு 40க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களை இணைக்கும் முக்கிய ரோடாகும். மேலும் வத்தலக்குண்டுவில் இருந்து கொடைக்கானல் செல்லும் ரோடு மழைக்காலத்தில் துண்டிக்கப்பட்டால் மாற்று வழித்தடமாக சித்தரேவு- பெரும்பாறை வழியாக பண்ணைக்காடு சென்று அங்கிருந்து கொடைக்கானல் செல்லலாம்.இதனால் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சித்தரேவு- பெரும்பாறை மலைச்சாலை பணிகளை விரைவுபடுத்தி முடிக்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: