கோவை, பிப்.27: தமிழக வனத்துறையில் பறக்கும் படைகள், கண்காணிப்பு நடவடிக்கை இல்லாததால் வன குற்றங்கள், கடத்தல் அதிகமாகி வருகிறது.
தமிழகத்தில் 13 மாவட்டத்தில் வனப்பகுதி உள்ளது. மொத்த நிலப்பரப்பில் 27 சதவீதம் காடுகளாக இருக்கிறது. வனப்பகுதி வழியாக பிற மாநிலங்களுக்கு வாகனங்கள் சென்று வருகிறது. வன விளை பொருட்கள், விலங்குகள், கஞ்சா, விலை உயர்ந்த மரங்கள் மற்றும் பல்வேறு தடை செய்யப்பட்ட பொருட்கள் வனப்பகுதி செக்போஸ்ட் வழியாக கடத்தப்படுவதாக புகார் எழுந்துள்ளது. மாநில அளவில், 17 பாரஸ்ட் ஸ்டேஷன் உள்ளது. இதில் பெரும்பாலான ஸ்டேஷன் முழுமையான செயல்பாட்டில் இல்லை. கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டத்தில் வனப்பரப்பு அதிகமாக காணப்படுகிறது. இந்த மாவட்டங்கள் வழியாகத்தான் கேரள மாநிலத்திற்கு அதிக வாகனங்கள் சென்று வரவேண்டியுள்ளது. ஆனால் இங்கே செயல்பாட்டில் இருந்த பாரஸ்ட் ஸ்டேஷன்கள் மூடப்பட்டது. கோவை வாளையாரில் 15 ஆண்டிற்கு முன்பிருந்த பாரஸ்ட் ஸ்டேஷன் மூடப்பட்டு, குடியிருப்பாக மாற்றப்பட்டது. இங்கே கண்காணிப்பு பணி முடங்கி கிடக்கிறது. மாநில அளவில் செங்கல்பட்டு, திருப்பத்தூர், வேலூர், சேலம், ஆத்தூர், கோவை ஆனைகட்டி, வாளையார், ஈரோடு உட்பட பல்வேறு பகுதிகளில் 112 பாரஸ்ட் செக்போஸ்ட் உள்ளது. இந்த செக்போஸ்ட்கள் முழுமையான பயன்பாட்டில் இல்லை. குறிப்பாக கோவை மாவட்டத்தில் சிறுமுகை, ஆனைகட்டி, தோலம்பாளையம், வாளையார் செக்போஸ்ட்கள் பகல் நேரத்தில் அதுவும் சில மணி நேரம் மட்டுமே செயல்பாட்டில் இருக்கிறது. இரவில் பெரும்பாலான பாரஸ்ட் ஸ்டேஷன் மூடி கிடக்கிறது.