×

அரசின் நிதியை செலவு செய்ய விடாமல் முடக்கும் போராட்டம்

புதுச்சேரி, பிப். 27: ஒரு ரூபாய் கூட புதுச்சேரி அரசு செலவு செய்ய முடியாத வகையில் நூதன போராட்டத்தை அமைச்சக ஊழியர்கள் 5ம் தேதி தொடங்க இருப்பதாக சங்கத்தினர் அறிவித்துள்ளனர். இதுகுறித்து புதுச்சேரி ஒருங்கிணைந்த அமைச்சக ஊழியர்கள் சங்க பொதுச்செயலாளர் ராஜேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கை: எல்லா துறைகளிலும் உள்ள அமைச்சக மற்றும் கணக்கு அதிகாரி பதவிகள், புதுச்சேரி அரசு நிர்வாகத்தின் அச்சாணியாக திகழ்கிறது. இந்த பதவி வகிப்பவர்கள்தான் புதுச்சேரி அரசு தொடர்பான அனைத்து நிதி செயல்பாடுகளும், ஆண்டு வரவுசெலவு தயாரித்தல், அரசு நிதியை செலவு செய்தல், ஊழியர்கள் சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களையும் கையாண்டு வருகின்றனர். புதுச்சேரி ஆட்சிப்பணியில் (பிசிஎஸ்) மொத்த பதவிகள் 83ல் 38 பணியிடங்கள் காலியாக உள்ளன. காலி பணியிட சதவீதம் 45 சதவீதமாக இருக்கிறது. முதுநிலை கணக்கு அதிகாரி மொத்த பதவிகள் 44ல் 41 காலியாக உள்ளன. காலி சதவீதம் 97 ஆக இருக்கிறது. இளநிலை கணக்கு அதிகாரி மொத்த பதவிகள் 64ல் 28 காலியாகவும், கண்காணிப்பாளர் பதவிகள் 350ல் 125 பதவிகள் காலியாக உள்ளன.

 இதுமட்டுமின்றி 270 அமைச்சக உதவியாளர்கள், 300 மேல்நிலை எழுத்தர்கள் (யூடிசி), 50 கீழ்நிலை எழுத்தர்கள் (எல்டிசி) பதவிகள் காலியாக உள்ளன. இப்பதவிகள் 2 ஆண்டுகளாக நிரப்பப்படாமல் உள்ளது. இந்த நிலையில், புதுச்சேரி அரசு நிர்வாகம் கரன்ட் டியூட்டி சார்ஜ் (சிடிசி) என்ற பெயரில் ஊழியர்களின் உழைப்பை 2 ஆண்டுகளாக சுரண்டி வருகிறது. அதற்குரிய ஊதியம் தரவில்லை. மேலும், 2 ஆண்டுகளாக பதவி உயர்வும் தரப்படவில்லை. இந்த நடைமுறை இதற்கு முன்பு நிர்வாகத்தில் இருந்ததில்லை.பணியிட மாற்றுக்கொள்கை மற்றும் மத்திய கண்காணிப்பு ஆணையத்தின் அறிவுறுத்தலுக்கு எதிராக பணியாளர் நிர்வாக சீர்திருத்தத்துறை அதிகாரிகள், ஊழியர்கள் 10  ஆண்டுகளுக்கு மேலாக அதே இடத்தில் பணிபுரிந்து வருவது லஞ்சத்துக்கு வழிவகுத்து வருகிறது. பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை அதிகார துஷ்பிரயோகம், சுயநலத்துடன் பணி செய்யும் அதிகாரிகள், ஊழியர்கள் மேலும் 4 மாதங்கள் அங்கேயே பணி செய்ய சார்பு செயலர் பரிந்துரைத்துள்ளது கண்டனத்துக்குரியது. 2 ஆண்டுகளாக எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்காமல் மேலும் பணி நீட்டிப்பு செய்திருப்பது லஞ்சத்தை ஊக்குவிக்கும்.

 இதனால் காலி பணியிடங்களை நிரப்புவது தொடங்கி முக்கிய கோரிக்கைகளை தீர்வுகாண நூதன முறையில் அரசு கவனத்தை ஈர்க்க முடிவு எடுத்துள்ளோம். வேலை நிறுத்தம் செய்யாமல் புதிய யுக்தியை கையாள இருக்கிறோம். புதுச்சேரி அரசிடமிருந்து ஒரு ரூபாய் செலவு செய்ய கணக்கு மற்றும் கருவூலத்துறை இயக்குனரக ஒப்புதல் இல்லாமல் செலவு செய்ய முடியாது. சம்பந்தப்பட்ட செலவு பட்டியல்களை ஒப்புதல் அளித்த பின்பே செலவு செய்ய முடியும். அனைத்து துறைகளும் நிதி செலவுகளை பில்லாக கணக்கு மற்றும் கருவூலத்துறைக்கு சமர்ப்பிப்பார்கள். இதை கணக்கு மற்றும் கருவூலத்துறையில் பணி புரியும் அலுவலர்கள் மற்றும் அதிகாரிகளால் ஆய்வு செய்த பின்பே செலவினங்களுக்கு ஒப்புதல் தரப்படுகிறது.
 நூதன முறைப்படி வழக்கம்போல் கணக்கு மற்றும் கருவூலத்துறையில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் பல்வேறு துறைகளில் இருந்து பெறப்படும் நிதி செலவுக்கான பில்களை ஆய்வு செய்து ஒப்புதல் தருவார்கள். ஆனால் ஒப்புதல் அளித்த பில்களை இசிஎஸ் பிரிவுக்கு அனுப்பப்பட மாட்டாது. இதனால் அரசு நிதியை செலவு செய்ய முடியாது. அரசு பிரச்னையை தீர்க்காவிட்டால் மார்ச் 5 முதல் இந்த நூதன முறை போராட்டம் நடத்துவோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED விக்கிரவாண்டி அருகே விபத்தில் 2 பேர்...