கள்ளக்குறிச்சி, பிப். 27: கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் பேரூராட்சி செயல் அலுவலராக பணியாற்றி வந்த கோமதி கடந்த ஆண்டு மார்ச் 8ம் தேதி பணி மாறுதல் செய்யப்பட்டார். இதையடுத்து திருக்கோவிலூர் பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயராமன், வளவனூர் பேரூராட்சி செயல் அலுவலர் அண்ணாதுரை ஆகியோர் இடைப்பட்ட ஓராண்டு காலத்தில் தியாகதுருகம் பேரூராட்சி (பொறுப்பு) செயல் அலுவலராக பணியாற்றி வந்தனர்.
தியாகதுருகம் பேரூராட்சிக்கு நிரந்தர செயல் அலுவலர் நியமிக்க வேண்டி பொதுமக்கள் அரசுக்கு பலமுறை வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து மணலூர்பேட்டை பேரூராட்சி செயல் அலுவலராக பணியாற்றி வந்த மல்லிகா பணி இடமாற்றம் செய்யப்பட்டு தியாகதுருகம் பேரூராட்சி செயல் அலுவலராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து அவர் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். அப்போது அலுவலர்கள் அனைவரும் புதிய செயல் அலுவலருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.