கடலூர், பிப். 27: கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கடலூர் மாவட்டத்தில் பிளஸ் 2 பொது தேர்வுகள் வரும் மார்ச் 2ம் தேதி தொடங்கி 24ம் தேதி வரை நடைபெற உள்ளது. இத்தேர்வை 229 பள்ளிகள் மூலம் 14,073 மாணவர்கள், 16,449 மாணவிகள் என மொத்தம் 30,522 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். பிளஸ் 1 பொது தேர்வுகள் மார்ச் 4ம் தேதி தொடங்கி 26ம் தேதி வரை நடைபெற உள்ளது. இத்தேர்வை 235 பள்ளிகள் மூலம் 14,516 மாணவர்கள், 15,826 மாணவிகள் என மொத்தம் 30,342 பேர் தேர்வு எழுதுகின்றனர். 10ம் வகுப்பு பொது தேர்வுகள் மார்ச் 27ம் தேதி தொடங்கி ஏப்ரல் 13ம் தேதி வரை நடைபெற உள்ளது. இத்தேர்வை 439 பள்ளிகள் மூலம் 18,341 மாணவர்கள், 17,205 மாணவிகள் என மொத்தம் 35,546 பேர் தேர்வு எழுதுகின்றனர்.
மேல்நிலை தேர்வு தொடர்பாக கடலூர் கல்வி மாவட்டத்தில் 35, விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில் 27, சிதம்பரம் கல்வி மாவட்டத்தில் 23, வடலூர் கல்வி மாவட்டத்தில் 23 என மொத்தம் 108 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.மேலும் 3 தேர்வு மையங்களில் (கடலூர், விருத்தாசலம், சிதம்பரம் கல்வி மாவட்டம்) தனித்தேர்வர்கள் தேர்வு எழுதுகின்றனர்.10ம் வகுப்பு பொது தேர்விற்கு கடலூர் கல்வி மாவட்டத்தில் 38 தேர்வு மையங்களும், விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில் 40, சிதம்பரம் கல்வி மாவட்டம் 28, வடலூர் கல்வி மாவட்டத்தில் 32 தேர்வு மையங்கள் என மொத்தம் 138 தேர்வு மையங்கள் உள்ளன. அதில் 4 மையங்களில் தனித் தேர்வர்கள் தேர்வு எழுதுகின்றனர். ஒவ்வொரு தேர்வு மையத்திற்கும் காவலர் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அறை கண்காணிப்பாளர்கள் தங்களுடைய பணியில் எவ்வித குந்தகமும் ஏற்படாத வண்ணம் செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆய்வு அலுவலர்கள் தலைமையிலான 8 பறக்கும் படையினரும், 264 உறுப்பினர்கள் கொண்ட நிலை படையினரும் அனைத்து தேர்வு மையங்களிலும் தேர்வுகள் எவ்வித புகாரும் இடமின்றி நடைபெறுவதை கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்வு மையங்களுக்கு அருகில் மைக் மற்றும் ஒலிபெருக்கி பயன்படுத்த தடை செய்யப்பட்டுள்ளது. தேர்வர்கள் கைபேசியை தேர்வு மையத்திற்குள் கொண்டு வர தடை செய்யப்பட்டுள்ளது. தேர்வு மையத்தில் குடிநீர் வசதி, மின்சார வசதி மற்றும் கழிவறை வசதி போதுமான அளவில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மாணவர்கள் தேர்வு மையத்திற்கு எளிதாக செல்லும்பொருட்டு போதுமான வகையில் அரசு பேருந்துகள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தேர்வு நாட்களில் தேர்வெழுதும் மாணவர்களுக்கு முதலுதவி அளிக்கும்வகையில் நடமாடும் மருத்துவ முகாம்கள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொது தேர்வுகளுக்கு கடலூர் முதன்மை கல்வி அலுவலகம், மற்றும் நான்கு கல்வி மாவட்டங்களில் கடலூர், வடலூர், சிதம்பரம், விருத்தாசலம் ஆகிய 5 இடங்களில் தேர்வு கட்டுப்பாட்டு அறைகள் செயல்படுகின்றன. அனைத்து மாணவர்களும் எவ்வித அச்சமுமின்றி பொது தேர்வை சிறப்பாக எழுதி உயர் மதிப்பெண்கள் பெற வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.