துரைப்பாக்கம்: துரைப்பாக்கம் வெங்கடேஷ்வரா நகர் 7வது தெருவை சேர்ந்தவர் சிவலிங்கம் (32). கட்டிடத் தொழிலாளி. இவர் நேற்று மாலை துரைப்பாக்கம் ராஜீவ்காந்தி சாலையில் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே பைக்கில் வந்த 3 இளைஞர்கள் திடீரென சிவலிங்கம் வைத்திருந்த செல்போனை பறித்துக்கொண்டு தப்பினர். அவர்கள், பல்லவன் குடியிருப்பு பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது அங்கு சாலையை கடந்த ஏழுமலை என்பவர் மீது பைக்கை மோதியுள்ளனர். இதில் ஏழுமலை மற்றும் பைக்கில் வந்த 3 பேர் காயமடைந்தனர். இதற்கிடையே அங்கிருந்த பொதுமக்கள் விபத்து ஏற்படுத்திய 3 பேரை பிடித்து கண்ணகி நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.