செங்கல்பட்டு மாவட்ட வரைவு வாக்கு சாவடி பட்டியல்: கலெக்டர் வெளியிட்டார்

தாம்பரம்: செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான வரைவு வாக்கு சாவடி பட்டியலை மாவட்ட கலெக்டர் ஜான் லூயிஸ் நேற்று வெளியிட்டார்.  செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த 8 நகராட்சிகள், 12 பேரூராட்சிகள் மற்றும் 8 ஊராட்சி ஒன்றியங்களின் வரைவு வாக்குச்சாவடி பட்டியல்கள் உள்ளாட்சி தேர்தலையொட்டி தயார் செய்யப்பட்டுள்ளது. வரைவு வாக்கு சாவடி பட்டியலை தாம்பரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ஜான் லூயிஸ் வெளியிட்டார். வரைவு வாக்கு சாவடி பட்டியலை நகராட்சி ஆணையர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் பெற்றுக்கொண்டனர். பின்னர் கலெக்டர் ஜான் லூயிஸ் கூறுகையில், “செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 8 நகராட்சிகள், 12 பேரூராட்சிகள், 8 ஊராட்சி ஒன்றியங்களுக்கான வாக்குச்சாவடி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இதன் மீதான பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கருத்துக்கள் பெறப்பட்டு 2.3.2020 அன்று பிற்பகல் 3.00 மணிக்கு செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி கலை அரங்கத்தில் கருத்துக்கேட்புக் கூட்டம் நடத்தப்படவுள்ளது” என்றார். இந்நிகழ்ச்சியில், தாம்பரம் கோட்டாட்சியர் ராஜ்குமார், தாம்பரம் நகராட்சி ஆணையர் (பொறுப்பு) கருப்பையாராஜா, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) ராமகிருஷ்ணன், பரங்கிமலை ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் பாஸ்கர் உட்பட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: