சீர்காழி,பிப்.26: சீர்காழி அருகே எடகுடி வடபாதி தென் பாதியில் ஊராட்சிக்கு சொந்தமான குளம் அமைந்துள்ளது. இந்த குளம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு குடிமராமத்து பணி திட்டத்தின் மூலம் தூர்வாரப்பட்டு சீரமைக்கப்பட்டது. இதனால் குளத்தில் தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது. இதன் மூலம் அந்த பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளது. குளத்தின் நீரை அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த குளத்தை அந்த பகுதியை சேர்ந்த ஒரு தனி நபர் வேலி வைத்து ஆக்கிரமிப்பு செய்துள்ளார்.
இந்த ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே நாகை மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.