×

கரூர் மாவட்டத்தில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம்

கரூர், பிப். 26: தமிழகத்தில் 32 மாவட்டங்களில் உள்ள அனைத்து கிராமம் மற்றும் குக்கிராமங்களில் கோமாரி நோய் தடுப்பூசி திட்டத்தின்கீழ் இதுவரை 17 சுற்று தடுப்பூசிப்பணி முடிவடைந்துள்ளது. தற்போது பிப்ரவரி 28ம் தேதி முதல் மார்ச் 19ம் தேதி முடிய தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின்கீழ் 1வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசிப்பணி கரூர் மாவட்டத்தின் அனைத்து கிராமங்களிலும் உள்ள பசுவினம் மற்றும் எருமையினங்களுக்கும் 20வது கால்நடை கணக்கெடுப்பின்படி தடுப்பூசி போடப்பட உள்ளது. மேலும் விடுபட்ட கால்நடைகளுக்கு மார்ச் 20ம் தேதி முதல் 29ம் தேதி வரையும் தடுப்பூசி போடப்பட உள்ளது. இந்நோய்க்கான ஊநீர் (வேக்சின்) அதற்கென உருவாக்கப்பட்ட குளிரூட்டப்பட்ட அறையில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து ஒவ்வொரு கிராமத்திலும் தடுப்பூசி பணிகள் மேற்கொள்ளப்படும். குறிப்பிட்ட நாளில்., இத்தடுப்பூசி பணிக்கென ஏற்படுத்தப்பட்டுள்ள தடுப்பூசி குழுவினர் மூலம் ஒவ்வொரு கிராமத்திலும் தற்போது உள்ள அனைத்து பசுவினம் மற்றும் எருமையினங்களை 20வது கால்நடை கணக்கெடுப்பின்படி கணக்கிட்டு, அவையனைத்திற்கும் தடுப்பூசி போடப்பட உள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் 100 சதவீதம் கால்நடைகளுக்கு தடுப்பூசி போடநடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது,

மேலும் இதுதொடர்பாக கிராமப்புற விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அனைத்து கிராமங்களிலும் கிராமசபை கூட்டத்தில் அளித்த அறிவுரைகளின்படி கால்நடைகளை குறிப்பிட்ட தேதியில் குறிப்பிட்ட இடங்களுக்கு அழைத்துச் சென்று தடுப்பூசி போட்டுக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது. கோமாரி நோயானது குறிப்பாக கலப்பின மாடுகளை அதிகம் தாக்கி கால்நடை வளர்ப்போருக்கு பொருளாதாரம் மற்றும் உற்பத்தி இழப்பை ஏற்படுத்துகிறது. இந்நோயினால் இறப்புகள் குறைவாக இருந்த போதிலும், கறவை மாடுகளின் பால் உற்பத்திக்குறைவு, எருதுகளின் வேலைத்திறன் குறைவு. கறவை மாடுகளின் சினைப்பிடிப்பு தடைபடுவது, இளங்கன்றுகளின் இறப்பு போன்ற பாதிப்புகளினால் பெரும் பொருளாதார இழப்பு ஏற்படுகிறது. மேலும் இந்நோய் பொதுவாக குளிர் மற்றும் பனிக்காலங்களில் நோய் பாதிக்கப்பட்ட இடங்களில் இருந்து வாங்கி வருதல், சுகாதாரமற்ற கால்நடை வளர்ப்பு மற்றும் கால்நடைகளுக்கு தடுப்பூசி போடாமல் இருத்தல் ஆகிய காரணங்களினால் விரைவாக காற்றின் மூலம் பரவும் தன்மை கொண்டது.

இந்நோய் பாதிக்கப்பட்ட மாடுகளின் உமிழ்நீர் மூலம் மற்ற கால்நடைகளுக்கு பரவுகிறது. எனவே கரூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் தங்களது பசுக்கள் எருதுகள், எருமைகள் மற்றும் மூன்று மாதத்திற்கு மேற்பட்ட இளங்கன்றுகளுக்கு பிப்ரவரி 28ம் தேதி முதல் மார்ச் 29ம் தேதி முடிய கால்நடைகளுக்கு (கோமாரி நோய்) தடுப்பூசி தவறாமல் போட்டுக்கொள்ளுமாறு கேட்டு கொள்வதாக கரூர் மாவட்ட கலெக்டர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

Tags : Quarry Vaccination Camp ,Karur District ,
× RELATED கிருஷ்ணராயபுரம் பகுதியில் சொட்டுநீர்...