திருப்பூர், பிப்.26: வருவாய்த்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் சார்பில், திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பாக நேற்று ஆர்பாட்டம் நடந்தது. இதில், கலெக்டர் அலுவலக கிளை தலைவர் சதீஸ்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் முருகதாஸ் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில், மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தும் வருவாய்த்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும். வருவாய்த்துறையில் முதுநிலை வருவாய் ஆய்வாளர் நிலையில், பணி முதுநிலை தொடர்பாக, நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் ஆணைகளை விரைவாக வழங்கிட வேண்டும். கடலூர் வருவாய்த்துறை அலுவலர்கள் மீது கடலூர் மாவட்ட கலெக்டர் எடுத்துவரும், ஊழியர் விரோத மற்றும் பழிவாங்கும் நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும். வருவாய்த்துறை அலுவலர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. மாவட்ட கலெக்டர் அலுவலக கிளை பொறுப்பாளர் ராஜேந்திரன் நன்றி கூறினார். இதில், ஏராளமானோர் கலந்து கொண்டனர்.