சேலம், பிப்.26: சேலம், தர்மபுரி விவசாயிகளிடம் மாங்காய் வாங்கிய மண்டி உரிமையாளர், அதற்கான பணம் ₹4கோடியை மோசடி செய்து விட்டதாக போலீஸ் கமிஷனரிடம் பரபரப்பு புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் விவசாயிகளிடம் மாங்காய் வாங்கி கொண்டு கடந்த 3 ஆண்டுகளாக ₹4 கோடி பணம் தராமல் ஏமாற்றி வரும் சேலத்தை சேர்ந்த மாங்காய் மண்டி உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி உண்ணாவிரத போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. நேற்று, கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் 100க்கும் மேற்பட்டோர் கலெக்டர் அலுவலகம் முன்பு திரண்டனர். ஆனால், அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் போராட்டத்துக்கு அனுமதி மறுத்தனர். மேலும், மாநகர போலீஸ் கமிஷனரிடம் இது குறித்து புகார் தெரிவித்தால் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என போலீசார் தெரிவித்தனர். இதனையடுத்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் மோகன் தலைமையில் 10க்கும் மேற்பட்டோர் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் சென்றனர். கமிஷனர் செந்தில்குமாரை சந்தித்து புகார் மனுவை அளித்தனர்.