அரூர், பிப்.26: அரூர் அரசு மகளிர் மேல்நிலை பள்ளியின் சத்துணவு அமைப்பாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
அரூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 800க்கும் மேற்பட்ட மாணவியர்கள் படிக்கின்றனர். இப்பள்ளி மாணவிகளுக்கு சத்துணவு மற்றும் முட்டைகள் வழங்கப்படுகிறது. இந்நிலையில், பள்ளியில் வழங்கப்படும் சத்துணவு தரம் குறைந்ததாகவும், முட்டைகள் மற்றும் உணவு பொருள்களின் இருப்புகள் குறைவாகவும், முறைகேடுகள் நடைபெறுவதாக, அரூர் சப் கலெக்டர் பிரதாப்புக்கு புகார்கள் வந்தது. இதையடுத்து, அரூர் சப் கலெக்டர் பிரதாப், அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின்போது, சத்துணவு தரமற்றதாவும், உணவு பொருள்களின் பதிவேடுகளில் முறைகேடுகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, சத்துணவு அமைப்பாளர் பிரகாசத்தை பணியிடை நீக்கம் செய்ய சப் கலெக்டர் உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில், சத்துணவு அமைப்பாளர் பிரகாசத்தை, அரூர் வட்டார வளர்ச்சி அலுவலர் மணிவண்ணன் பணியிடை நீக்கம் செய்தார்.