தர்மபுரி, பிப்.26: தர்மபுரி மாவட்டத்தில் 3 வாரத்திற்கு கோமாரி நோய் வராமல் தடுக்க, தடுப்பூசி போடப்படுகிறது. இதுகுறித்து தர்மபுரி மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை: தர்மபுரி மாவட்டத்தில் 3,85,505 பசு மற்றும் எருமை இனங்கள் உள்ளன. இவைகளுக்கு கோமாரி நோய் வராமல் தடுக்க, தேசிய நோய் தடுப்பு திட்டத்தின்கீழ் (1வது சுற்று) மொத்தம் 3,85,505 டோஸ்கள் கோமாரி நோய் தடுப்பூசி மருந்துகள், தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் 28.02.2020 முதல் 19.03.2020 வரை மூன்று வார காலத்திற்கு சிறப்பு முகாம்கள் மூலமாக, கோமாரி நோய் தடுப்பூசி இலவசமாக போடப்பட உள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் இம்முகாம்கள் மூலமாக மாவட்டத்திலுள்ள அனைத்து பசு, எருமை மற்றும் 4 மாதத்திற்கு மேற்பட்ட கன்றுகளுக்கும் தடுப்பூசி போடப்பட உள்ளது. இப்பணி 28.02.2020 முதல் 19.03.2020 வரை தொடர்ந்து நடக்கும்.
விடுபட்ட கால்நடைகளுக்கு தடுப்பூசி பணி 20.03.2020 முதல் 29.03.2020 வரை மேற்கொள்ளப்படும். விவரங்களுக்கு அருகிலுள்ள கால்நடை மருந்தகம், கால்நடை கிளை நிலையம் மற்றும் கால்நடை மருத்துவமனையை அணுகவும். கால்நடை வளர்ப்போர் இவ்வாய்ப்பினை தவறாமல் பயன்படுத்தி, 100 சதவீதம் தங்களுடைய கால்நடைகளுக்கு இலவசமாக தடுப்பூசி போட்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் விவரங்களுக்கு மாவட்ட கலெக்டரின் கட்டணமில்லா தொலைபேசி எண் 1077, 1800 425 7016, 1800 425 1071,ஐ தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.