×

பழவேற்காட்டில் மீட்கப்பட்ட து தாய், மகள் சடலம்

கும்மிடிப்பூண்டி, பிப். 26: பழவேற்காட்டில் நேற்று முன்தினம் மீட்கப்பட்ட பெண் சடலங்கள், தாய், மகள் என்று அடையாளம் தெரிந்தது. அவர்கள் தற்கொலை செய்தார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். கும்மிடிப்பூண்டி அடுத்த சுண்ணாம்புகுளம் ஊராட்சி, கொக்குபாளையம் பகுதியை சேர்ந்தவர் ரவி (49). இவரது மனைவி வீரம்மாள். இவர்களுக்கு பாலமுரளி, தேவயானி என மகன், மகள் உள்ளனர்.
இவர்களுக்கும் அதே பகுதியில் வசிக்கும் உறவினர்   சிவா என்பவருக்கும்  கடந்த சில நாட்களுக்கு முன் நிலத்தகராறு ஏற்பட்டுள்ளது. இது குறித்து கடந்த 20 ம் தேதி ஆரம்பாக்கம் காவல் நிலையத்தில்  இரு தரப்பினரும் தனித்தனியாக புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்த விசாரித்து வருகின்றனர். இந்தநிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன் ரவி, தனது மனைவி மற்றும் மகள், மகனுடன்  கோயிலுக்கு சென்றுவருவதாக  உறவினர்களிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். அதன்பிறகு அவர்கள் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் அவர்களை பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த  மற்றொரு உறவினர் ராமதாஸ்  இதுகுறித்து ஆரம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த நிலையில் நேற்று முன்தினம் பழவேற்காடு கடற்கரை பகுதியில் அழுகிய நிலையில்  2 பெண்களின் சடலம் கிடந்தது. அதை போலீசார் கைப்பற்றி  பிரேத பரிசோதனைக்காக  பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  மேலும்,  ஆரம்பாக்கம் போலீசார், ராமதாசை பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சடலங்களை காட்டினர். அதை பார்த்த அவர், மாயமான   வீரம்மாள், அவரது மகள்  தேவயானி  ஆகியோரது சடலங்கள் என அடையாளம் காட்டினார்.  இதுகுறித்து ஆரம்பாக்கம் போலீசார்  வழக்கு பதிந்து  தாயும், மகளும் கடலில் குதித்து தற்கொலை செய்தார்களா அல்லது வேறு காரணமா  என்றும் மாயமான ரவி மற்றும் பாலமுரளி ஆகியோர் என்ன ஆனார்கள் என்றும் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags :
× RELATED வெளிமாநில தொழிலாளர்களுக்கு...