கோவை, பிப்.26: தமிழக வனப்பகுதியில் கால்நடை மேய்ச்சலுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 3-3-2000ம் ஆண்டில் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அரசாணையில் (எண் 47) வனத்தில் கால்நடைகள் மேய்ச்சலுக்கு அனுமதி வழங்கி கட்டணம் விதிக்கப்பட்டது. இதில் வெள்ளாடு, செம்மறியாடுகள், மாடு, எருமைகளுக்கு அனுமதி இலவசம். கழுதை, குதிரைக்கு 10 ரூபாய், ஒரு யானைக்கு 100 ரூபாய் என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டது. கடந்த 8-8-2006ம் ஆண்டில் வனத்துறையின் புதுப்பிக்கப்பட்ட அரசாணையில் (எண்: 78) இதே கட்டண நடைமுறை குறிப்பிடப்பட்டது. சம்பந்தப்பட்ட வனச்சரக அலுவலகம் அல்லது மாவட்ட வன அலுவலகத்தை அணுகி மேய்ச்சலுக்கான அனுமதி பாஸ் பெறலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. மத்திய வன அமைச்சரகம் வன நிலத்தில் மேய்ச்சலுக்கான நடைமுறைகள், விதிகளை மாற்றியும் தமிழக வனத்துறை நிர்வாகம் மேய்ச்சலுக்கான உத்தரவில் எந்த மாற்றமும் செய்யவில்லை. பழைய அரசாணையின்படி சில பகுதிகளிலும், உள்ளூர் வனத்துறையினர் அதிகாரத்தில் சில பகுதிகளிலும் கால்நடை மேய்ச்சலுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. அதிலும் கழுதை, குதிரை, யானை மேய்ச்சலுக்கான கட்டண நடைமுறை வியப்பை ஏற்படு–்த்தியுள்ளது.