பெருந்துறை, பிப். 26: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் விழா பெருந்துறை தொகுதி அ.தி.மு.க. சார்பில் நேற்று முன்தினம் கொண்டாடினர். இந்த விழாவையொட்டி, பெருந்துறை நகர், குன்னத்தூர் சாலை பிரிவில், மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த ஜெயலலிதா திருவுருவப் படத்திற்கு, முன்னாள் அமைச்சரும், பெருந்துறை எம்.எல்.ஏ.வுமான தோப்பு வெங்கடாச்சலம் மற்றும் கட்சியினர் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. மேலும் தோப்பு வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ. பெருந்துறை தொகுதியில் பல்வேறு இடங்களில் அ.தி.மு.க கட்சி கொடியினை ஏற்றி வைத்து, ஜெயலலிதா திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் பள்ளி குழந்தைகளுக்கும், பொதுமக்களுக்கும் இனிப்புகள் வழங்கினார். தொடர்ந்து மதியம், பெருந்துறை, சோளீஸ்வரன் கோயில் மற்றும் திங்களூரில் பொதுமக்களுக்கு அன்னதான வழங்கும் நிகழ்ச்சியை தோப்பு வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். இதேபோல் பட்டக்காரன்பாளையம், மணியம்பாளையம், கணக்கம்பாளையம் அரசு பள்ளி குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கினர். பெரிய வீரசங்கிலி, சின்ன வீரசங்கிலி, கைக்கோளபாளையம், வடமலைகவுண்டன்பாளையம், பச்சாக்கவுண்டன்பாளையம், மாச்சாபாளையம், கிரேநகர் பகுதிகளில் அங்கன்வாடி மற்றும் அரசு பள்ளிகளில் குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.