தென்காசி, பிப். 26: நெல்லை மேற்கு மாவட்ட திமுக மருத்துவர் அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தென்காசியில் நடந்தது.கூட்டத்திற்கு மாவட்ட அமைப்பாளர் டாக்டர் செண்பகவிநாயகம் தலைமை வகித்தார். துணை அமைப்பாளர்கள் மாரியப்பன், சஞ்சீவி, ஷேக் முகமது, முன்னிலை வகித்தனர். மாவட்ட மருத்துவரணி துணை அமைப்பாளர் டாக்டர் சுமதி வரவேற்றார். மேற்கு மாவட்ட திமுக செயலாளர் வக்கீல் சிவபத்மநாபன் சிறப்புரையாற்றினார். கூட்டத்தில், மார்ச் 1ம் தேதி திமுக தலைவர் மு. க ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி நடைபெறும் ரத்த தான முகாமிற்கு தேவையான ஏற்பாடுகள் செய்வது. அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு பழங்கள், பிஸ்கட் வழங்குவது.
வாசுதேவநல்லூரில் அனாதை ஆசிரமத்தில் உள்ள குழந்தைகளுக்கு அன்னதானம் வழங்குவது. மாவட்டத்தில் முக்கிய நகரில் உள்ள மேல்நிலைப்பள்ளிகளில் டெங்கு விழிப்புணர்வு மற்றும் நிலவேம்பு குடிநீர் வழங்கும் முகாம், இலவச மருத்துவ முகாம் நடத்துவது. ஈரோடு மாவட்டத்தில் நடைபெறும் மராத்தான் ஓட்டத்தில் ஏராளமானோரை பங்கேற்கச் செய்வது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் விவசாய அணி மாவட்ட துணை அமைப்பாளர் சீவநல்லூர் சாமித்துரை, கடையம் ஜெயக்குமார், வாசுதேவநல்லூர் வக்கீல் பொன்ராஜ், பகுத்தறிவு பேரவை ராமராஜ், மாரியப்பன், செண்பகம்,வடகரை ராமர், தொண்டரணி பரமசிவன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மருத்துவர் அணி துணை அமைப்பாளர் டாக்டர் மாரிமுத்து நன்றி கூறினார்.