×

வி.கே.புரம் அருகே குளத்தில் மூழ்கி தொழிலாளி பலி

வி.கே.புரம், பிப். 26: விகே புரம் அருகே குளத்தில் குளிக்கச் சென்ற  பஞ்சாலை முன்னாள்  தொழிலாளி நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். வி.கே.புரம் அருகேயுள்ள ஆறுமுகம்பட்டி, பழைய ரேஷன் கடை தெருவை சேர்ந்தவர் தங்கையா (57). வி.கே.புரம் பஞ்சாலையில் தொழிலாளியாக வேலைபார்த்து விருப்ப ஓய்வு பெற்ற இவர், தற்போது எலும்பு முறிவுக்கான நாட்டு வைத்தியம் செய்து வந்தார். நேற்று முன்தினம் மாலை 5 மணியளவில் ஆறுமுகம்பட்டி குளத்திற்கு குளிக்க சென்றார். நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால் குடும்பத்தினர் தேடி பார்த்தனர். குளக்கரையில் அவரது ஆடைகளும், செருப்பும் கிடந்தன. உடனே அம்பை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். நிலைய அலுவலர் இசக்கி தலைமையில் தீயணைப்பு வீரர்கள், இரவு முழுவதும் குளத்தில் தேடினர். ஆனால் தங்கையாவின் உடல் கிடைக்கவில்லை.  இந்நிலையில் நேற்று காலை 7 மணிக்கு தீயணைப்பு வீரர்கள், மீண்டும் தேடுதல் பணியை தொடங்கிய போது குளத்தில் தங்கையா உடல் மிதந்தது. தகவலறிந்த வி.கே.புரம் எஸ்ஐ மணிகண்டன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தங்கையாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அம்பை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.  குளத்தில் மூழ்கி பலியான தங்கையாவுக்கு ராதா என்ற மனைவியும், திருமணமாகாத ஒரு மகன், திருமணமான 2 மகள்களும் உள்ளனர்.

Tags : pool ,VK Puram ,
× RELATED தை அமாவாசையை முன்னிட்டு கமலாலய குளத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்