திமுக தலைவர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திருச்செந்தூரில் அகில இந்திய அளவில் ஆண், பெண் மின்னொளி கபடி போட்டி அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ அறிவிப்பு

ஆறுமுகநேரி, பிப்.26:  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 69வது பிறந்த நாளை முன்னிட்டு அகில இந்திய ஆண், பெண்களுக்கான கபடி போட்டி வருகிற ஏப்ரல் மாதம் நடத்தப்படும் என தூத்துக்குடி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்டம் அமச்சூர் கபடி கழக ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் மாலை சாகுபுரம் விருந்தினர் மாளிகையில் நடந்தது. இக்கூட்டத்திற்கு அமச்சூர் கபடி கழக தலைவர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., தலைமை வகித்தார். அமச்சூர் கபடி கழக செயலாளர் கிறிஸ்டோபர் ராஜன், பொருளாளர் ஜிம்ரிஸ், ஒருங்கிணைப்பாளர் அர்ஜுனா விருது பெற்ற இந்திய கபடி முன்னாள் வீரர் மணத்தி கணேசன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் 69வது பிறந்த தினத்தை முன்னிட்டு வருகிற ஏப்ரல் 2,3,4,5 ஆகிய தேதிகளில் அகில இந்திய அளவில் ஆண், பெண்களுக்கான மின்னொளி கபடி போட்டி நடத்துவது என்றும், போட்டிகள் திருச்செந்தூர் சிவந்தி ஆத்தனார் மணிமண்டபத்திற்கு எதிரேயுள்ள மைதானத்தில் நடத்துவது என்றும் போட்டியில் முதலிடம் பெறும் அணிக்கு ரூ.10 லட்சத்து 69 ஆயிரம் ரொக்க பரிசும், கோப்பையும், 2ம் இடம் பெறும் அணிக்கு ரூ.5 லட்சத்து 69 ஆயிரமும், 3ம், 4ம் இடத்தை பெறும் அணிக்கு தலா ரூ.3லட்சத்து 69 ஆயிரமும், சிறந்த ஆட்டகாரர் 3 பேருக்கு மோட்டார் சைக்கிள்களும் வழங்குவது என்றும் தீர்மானிக்கப்பட்டதாக கபடி கழக தலைவர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ தெரிவித்தார்.

இப்போட்டியில் இந்தியாவின் தலைசிறந்த கபடி அணிகளான உ.பி. பஞ்சாப், கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு உட்பட பல அணிகள் கலந்துக் கொள்கின்றன. கூட்டத்தில் திமுக மாநில மாணவரணி துணை அமைப்பாளர் உமரிசங்கர், மேலாத்தூர் கிராம பஞ்சாயத்து தலைவர் சதீஸ்குமார், ஓட்டப்பிடாரம் பஞ்சாயத்து தலைவர் இளையராஜா, காயல்பட்டினம் நகர திமுக செயலாளர் முத்துமுகம்மது, காயல்பட்டினம் நகர சபை முன்னாள் கவுன்சிலர் ஓடை ரெங்கநாதன் சுகு, கபடி கந்தன், மற்றும் மாவட்டத்தில் உள்ள கபடி கழக அணி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். வக்கீல் கிருபா நன்றி கூறினார்.

Related Stories: