போக்குவரத்துக்கு லாயக்கற்ற கழுகுமலை -வேலாயுதபுரம் சாலை சீரமைக்க கிராம மக்கள் வலியுறுத்தல்

கழுகுமலை, பிப் 26: கழுகுமலையிலிருந்து வேலாயுதபுரம் செல்லும் சாலை குண்டும் குழியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இதனை உடனடியாக சீரமைக்க வேண்டுமென கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.    கழுகுமலையிலிருந்து கயத்தார் மெயின்ரோட்டில் உள்ள வேலாயுதபுரம் வரை தார் சாலை அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகிறது. இந்த சாலையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படாமல் அப்படியே கிடப்பில் போடப்பட்டதால் கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் காட்சியளிக்கிறது.

   இந்த சாலை வழியாக இப்பகுதி மக்கள் விவசாய நிலங்களுக்கு செல்பவர்களும், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகளும், இரு சக்கர வாகனங்களில் செல்பவர்களும் மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். மேலும் இரவு நேரங்களில் இந்த வழியாக இரு சக்கர வாகனங்களில் வருவோர் விபத்துக்களில் சிக்கி காயத்துடன் செல்கின்றனர். எனவே இந்த சாலையை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: