திருச்சி, பிப். 26: கரூர் மாவட்டம் குளித்தலை நடுத்தெருவை சேர்ந்தவர் கனகராஜ்(29), கூலித்தொழிலாளி. இவரது மனைவி லதா(23). இவர்களுக்கு திருமணமாகி 14 நாட்களாகிறது. இந்நிலையில் லதா கடந்த 23ம் தேதி தோழி ஒருவர் திருச்சிக்கு வருவதாகவும், அவரை அழைத்து வர வேண்டும் எனக்கூறி கணவருடன் திருச்சி சத்திரம் பஸ்நிலையத்துக்கு வந்தார். அங்கு ஜெராக்ஸ் கடைக்கு சென்றுவிட்டு வருவதாகவும், பேக்கரி அருகே கணவரை நிற்க வைத்து சிறிது நேரம் காத்திருக்கும்படி கூறிவிட்டு சென்ற லதா நீண்ட நேரமாகியும் திரும்பி வரவில்லை. எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து லதாவின் தந்தை சுப்ரமணி அளித்த புகாரின்பேரில் கோட்டை போலீசார் வழக்குப்பதிந்து லதாவை தேடி வருகின்றனர்.