திண்டுக்கல், பிப். 26: மறைந்த முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளை பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாக கடைபிடிக்க தமிழக அரசு முடிவு எடுத்துள்ளது.அதன்படி திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழா கடைபிடிக்கப்பட்டது. கலெக்டர் விஜயலட்சுமி தலைமையில் அனைத்து துறை அலுவலர்கள் உறுதிமொழி எடுத்து கொண்டனர்.தொடர்ந்து பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினத்தையொட்டி அரசு மற்றும் அரசு உதவி பெறும் இல்லங்களில் உள்ள குழந்தைகளுக்கு ஓவிய போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் திண்டுக்கல் வளர் மகளிர் இல்லத்தை சேர்ந்த 12ம் வகுப்பு மாணவி ஜீவிதா முதலிடமும், காமலாபுரம் செயின்ட் ஜோசப் குழந்தைகள் இல்லத்தை சேர்ந்த 9ம் வகுப்பு மாணவி அந்தோணியம்மாள் புஷ்பா 2ம் இடத்தையும், காந்திகிராமம் சவுபாக்கியா குழந்தைகள் இல்லத்தை சேர்ந்த 11ம் வகுப்பு மாணவி கலைவாணி 3ம் இடத்தையும் பிடித்தனர். மூவருக்கும் பரிசுகள், பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார்.