கள்ளக்குறிச்சி, பிப். 26: கள்ளக்குறிச்சி நகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் குற்ற சம்பவங்களை தடுக்கும் விதமாக 183 போலீசார் நேற்று திடீரென சோதனை செய்ததால் கள்ளக்குறிச்சியில் பரபரப்பு ஏற்பட்டது. கள்ளக்குறிச்சி எஸ்பி ஜெயச்சந்திரன் உத்தரவின் பேரில், டிஎஸ்பிக்கள் கள்ளக்குறிச்சி ராமநாதன், உளுந்தூர்பேட்டை விஜிகுமார், இன்ஸ்பெக்டர்கள் விஜயகுமார், குமார், சுமதி, ரேவதி, பத்மா, மகேஸ்வரி, பார்த்திபன், 15 சப்-இன்ஸ்பெக்டர்கள், உள்ளூர் போலீசார் 79 பேர், வெளியூர் போலீசார்கள் 30 பேர், ஆயுதபடை காவலர்கள் 20 பேர், சிறப்பு காவல்படை காவலர்கள் 30 பேர் என மொத்தம் 183 போலீசார் நேற்று கள்ளக்குறிச்சி பஸ் நிலைய வளாகத்திற்கு திடீரென வரவழைக்கப்பட்டனர். அப்போது எஸ்பி ஜெயச்சந்திரன் போலீசாருக்கு அறிவுரை வழங்கினார்.
அதன்படி, இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 14 குழுவாக பிரிந்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும். அதில் குறிப்பாக லாட்டரி விற்பனை செய்பவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் குற்றச்செயல்களை தடுக்கும் விதமாக இரண்டு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை கண்காணித்து சோதனை செய்ய வேண்டும்.