புதுச்சேரி, பிப். 26: கொசப்பாளையத்தில் குடும்ப வறுமை காரணமாக கணவரை பிரிந்து 2 குழந்தைகளுடன் வாழ்ந்த பெண் விஷம் குடித்து இறந்தார். புதுவை கொசப்பாளையத்தில் வசித்தவர் கனகவள்ளி (39). இவரது கணவர் ஏழுமலை, 4 வருடமாக மனைவியை பிரிந்து தனியாக அரியாங்குப்பத்தில் வசித்து வருகிறார். அவ்வப்போது கொசப்பாளையம் வந்து குழந்தைகளை பார்த்துவிட்டு செலவுக்கு பணம் கொடுத்துவிட்டு செல்வாராம். இருப்பினும் வீட்டு வேலை செய்து 2 குழந்தைகளையும் கனகவள்ளி கவனித்து வந்துள்ளார்.
சமீபகாலமாக அவருக்கு வேலையும் ஒழுங்காக அமையாததால் தனது குழந்தைகளான புகழேந்தி (14), தமன்னாவின் (10) படிப்பு செலவுக்கு பணம் கட்ட முடியாமல் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் சில நாட்களாக மனமுடைந்த நிலையில் காணப்பட்ட கனகவள்ளி சம்பவத்தன்று இரவு விஷம் குடித்து நுரை தள்ளிய நிலையில் வீட்டில் மயங்கி விழுந்தார்.