குடும்ப வறுமையால் விரக்தி கணவரை பிரிந்து வாழ்ந்த பெண் விஷம் குடித்து சாவு

புதுச்சேரி, பிப். 26:  கொசப்பாளையத்தில் குடும்ப வறுமை காரணமாக கணவரை பிரிந்து 2 குழந்தைகளுடன் வாழ்ந்த பெண் விஷம் குடித்து இறந்தார். புதுவை கொசப்பாளையத்தில் வசித்தவர் கனகவள்ளி (39). இவரது கணவர் ஏழுமலை, 4 வருடமாக மனைவியை பிரிந்து தனியாக அரியாங்குப்பத்தில் வசித்து வருகிறார். அவ்வப்போது கொசப்பாளையம் வந்து குழந்தைகளை பார்த்துவிட்டு செலவுக்கு பணம் கொடுத்துவிட்டு செல்வாராம். இருப்பினும் வீட்டு வேலை செய்து 2 குழந்தைகளையும் கனகவள்ளி கவனித்து வந்துள்ளார்.

 சமீபகாலமாக அவருக்கு வேலையும் ஒழுங்காக அமையாததால் தனது குழந்தைகளான புகழேந்தி (14), தமன்னாவின் (10) படிப்பு செலவுக்கு பணம் கட்ட முடியாமல் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் சில நாட்களாக மனமுடைந்த நிலையில் காணப்பட்ட கனகவள்ளி சம்பவத்தன்று இரவு விஷம் குடித்து நுரை தள்ளிய நிலையில் வீட்டில் மயங்கி விழுந்தார்.

 இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது குழந்தைகள், அக்கம்பக்கத்தினர் மற்றும் தனது தந்தை உதவியுடன் கனகவள்ளியை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே கனகவள்ளி இறந்துவிட்டதாக கூறிவிட்டனர். இது குறித்து மரக்காணம் கூனிமேட்டில் வசிக்கும் கனகவள்ளியின் அக்காள் முருகவேணி அளித்த புகாரின்பேரில் உருளையன்பேட்டை போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: