கும்பகோணம், பிப். 25: கோடை காலம் துவங்குவதையொட்டி ராமநாதபுரத்தில் இருந்து தஞ்சை மாவட்டத்துக்கு மேய்ச்சலுக்காக செம்மறி ஆடுகள் அழைத்து வரப்பட்டுள்ளது.ராமநாதபுரம், பெரம்பலூர் மாவட்டங்களில் பெரும்பாலும் செம்மறி வளர்க்கும் தொழில் தான் பிரதானம். ஆனால் அந்த பகுதியில் போதிய தண்ணீர் இல்லாமலும், புல், மேய்ச்சல் நிலங்கள் இல்லாமல் போனதால் ஆடுகள் இரை கிடைக்காமல் இறந்து போகும்.பொதுவாக ஆடுகள் இறை திண்று கொண்டே இருக்கும். ஆனால் ராமநாதபுரம், பெரம்பலூர் மாவட்டங்களில் போதிய இரை கிடைக்காது.தற்போது கோடை காலம் தொடங்குவதை முன்னிட்டு தஞ்சை மாவட்ட பகுதிக்கு மேய்ச்சலுக்காக ராமநாதபுரம், பெரம்பலூர் பகுதியில் இருந்து செம்மறி ஆடுகள் அழைத்து வரப்பட்டுள்ளது. சம்பா அறுவடை முடிந்த பின் அடுத்த சாகுபடிக்கு முன்னதாக வயலை கொஞ்ச காலம் காற்றாட போட்டு வைக்கும்போது அந்த நிலத்தில் ஆடு, மாடு கிடை போட்டால் வயலுக்கு சத்தான உரம் கிடைப்பதோடு மண் வளமும் மேம்படும்.காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை, சம்பா, தாளடி சாகுபடி செய்த பிறகு ஏப்ரல் மாதம் தொடங்கி ஜூன் மாதம் வரை 3 மாதங்களுக்கு வயலை ஆறப்போடுவது உண்டு. அந்த காலகட்டத்தில் ராமநாதபுரம், பெரம்பலூர், சிவகங்கை மாவட்டங்களில் உள்ள ஆடு மேய்ப்பவர்கள் ஆடுகளை மந்தை மந்தையாக லாரிகளிலும், சில நேரம் மேய்ச்சல் விட்டு கொண்டும் வருவர்.