திருச்சி, பிப்.25: திருச்சி ராம்ஜிநகர் மில்லில் நிறுத்தப்பட்ட 850 ஊழியர்களுக்கு பணப்பலன்களை அளிக்கும் வரை மில்லை விற்க தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முன் பெண்கள் ஒப்பாரி வைத்து போராட்டம் நடத்தினர்.
திருச்சி ராம்ஜிநகரில் 1936ம் ஆண்டு உமா பரமேஸ்வரி பஞ்சாலை இயங்கி வந்தது. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றினர். 1983 வைர மூல்ஜி ராம்ஜி கட்டுப்பாட்டில் மில் இயங்கி வந்தது. அதன் பின்னர் சேலத்தை சேர்ந்த சுப்ரமணி செட்டியார் என்பவர் மில்லை வாங்கி 1993ம் ஆண்டு வரை நடத்தி வந்தார். அதன் பின் மில் நலிவடைந்ததாக கூறி மில் படிப்படியாக மூடப்பட்டது. இதனால் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் வேலையிழந்தனர். இதில் 850 ஊழியர்களுக்கு மில் நிர்வாகம் பிடித்தம் செய்த பி.எப், பணிகொடை போன்ற பண பலன்களை இதுவரை தரவில்லை.இந்நிலையில், நீதிபதி தலைமையிலான நலிவடைந்த மில்களை கலைத்தல் அதிகார குழு பஞ்சாலையை விற்க நடவடிக்கை எடுத்து வந்தது. இந்த பஞ்சாலையை விற்பனை செய்ய போனிக்ஸ் என்ற நிதி நிறுவனம் கலைத்தல் அதிகார குழுவிடமிருந்து பவர் வாங்கியது. இந்நிறுவனம் மூலம் திருச்சி முன்னாள் எம்பி அடைக்கலராஜ் மகன் லூயிசிடம் விற்பனை செய்ய முயற்சி நடந்து வருகிறது.
இதற்கிடையே, மில்லிலிருந்த பெரிய இயந்திரங்கள் கொஞ்சம் கொஞ்சமாக விற்பனை செய்யப்பட்டது. இதை எதிர்த்து அவ்வப்போது பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் போராடி வந்தனர். தவிர மில்லை இடிக்கும் பணி சமீபத்தில் நடந்தது. இதை தடுக்க தொழிலாளர்கள் திரண்டனர். ஆனால், தொழிலாளர் சங்கத்தினர், உள்ளூர் அரசியல்வாதிகளின் தலையீட்டு சமரசம் பேசியதால் அவர்கள் கலைந்து சென்றனர். ஆயினும் தொடர்ந்து தாங்கள் ஏமாற்றப்படுவதை உணர்ந்த மில் தொழிலாளர்கள், திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று ஒப்பாரி போராட்டம் நடத்தினர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘மில்லை விற்று தொழிலாளர்களுக்கு உரிய பணத்தை வழங்க வேண்டியது தான் நலிவடைந்த மில்களை கலைத்தல் அதிகார குழுவின் பணி. ஆனால், கலைத்தல் அதிகார குழுவிடிருந்து மில்லை விற்பனை செய்ய பவர் பெற்ற போனிக்ஸ் நிதி நிறுவனம், கலைத்தல் அதிகார குழுவையும், தொழிலாளர்களையும் ஏமாற்றும் போக்கினில் செயல்படுகிறது. 100 கோடி ரூபாய் மதிப்புள்ள இடத்தை வெறும் 9 கோடிக்கு தான் விற்பனையானதாக கூறுகிறது. விற்பனை செய்த பணத்தில் பாதியை கலைத்தல் குழுவிடமும் ஒப்படைக்கவில்லை. எனவே, 27 ஏக்கரில் விற்பனை செய்தது போக எஞ்சிய இடங்களை விற்க தடை விதிக்க வேண்டும். தொழிலாளர்களுக்கு உரிய தொகையை வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.தொழிலாளியும், இயக்குனரும் திருச்சி வந்தனர்