திருச்சி, பிப்.25: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மண்ணச்சநல்லூர் வட்ட செயலாளர் முத்துகிருஷ்ணன் தலைமையில் ஏராளமான பெண்கள் திருச்சி கலெக்டர் சிவராசுவிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:மண்ணச்சநல்லூர் நம்பர்.1 டோல்கேட் சேலம் ரோட்டில் திறக்கப்பட்டுள்ள அரசு மதுபான கடை மதுராபுரிநகர், ஓம் சக்தி நகர், குட்டி மணி நகர், விஎன் நகர், திருவள்ளுவர் அவென்யூ, ஜெஜெ நகர், மருத்துவமனை, பஸ் நிறுத்தம், பள்ளி ஆகிய பகுதிகளின் மத்தியில் அமைந்துள்ளது. மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் அமைந்துள்ள இந்த மதுபானக் கடையால் பெரும் இடையூறு ஏற்பட்டுள்ளது. எனவே இந்த மதுபானக் கடையை அகற்ற வேண்டும். தவிர நம்பர்.1 டோல்கேட் சேலம் ரோட்டில் ஆடு, கோழி, மீன் காய்கறி கடைகள் உள்ளன. இவற்றுக்கு தனி இடம் ஒதுக்கி தந்து மார்க்கெட் அமைத்து தரவேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.ஜனநாயக வாலிபர் சங்க மாநகர மாவட்ட செயலாளர் லெனின் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: திருவெறும்பூர் என ஊர் பெயராக அழைக்க எறும்பீஸ்வரர் மலைக்கோயிலின் சிறப்பே ஆகும். சோழ மன்னர்களால் பல நூற்றாண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்த மலைக்கோயில் பராமரிப்பு ஏதுமின்றி உள்ளது. பிரதோஷம் மற்றும் வாரம் தோறும் வரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளான குடிநீர், கழிவறைகள், ஓய்வறைகள், இருக்கைகள், காலணி, வாகன பாதுகாப்பிடம் அமைத்து தரவேண்டும். கோயில் தெப்பக்குளம் பராமரிக்காமல் துர்நாற்றம் வீசுகிறது. சிறுவர் பூங்கா, தெப்பக்குளத்தில் படகு சவாரி உள்ளிட்ட பொதுழு போக்கு அம்சங்களுடன் நவீனப்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.