திருப்பூர்,பிப்.25:திருப்பூரில் 6 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கியல் வாலிபருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருப்பூர் மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருப்பூர், கோல்டன் நகர் பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி (எ) குரு (31). பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவர் கடந்த 21.09.2019 அன்று வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 6 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் திருப்பூர் வடக்கு அனைத்து மகளிர் போலீசார் கந்தசாமியை (எ) குருவை கைது செய்து சிறையிலடைத்தனர். இந்த வழக்கானது திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. நேற்று இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்த மகளிர் நீதிமன்ற நீதிபதி ஜெயந்தி, சிறுமியை பலாத்காரம் செய்த கந்தசாமி (எ) குருவிற்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.