திருப்பூர், பிப்.25: திருப்பூரில், தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மாநிலத் தகவல் கமிஷனர் பிரதாப்குமார் தலைமையில், அனைத்து அரசுத்துறை அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் நேற்று நடந்தது. திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற பயிற்சி முகாமிற்கு கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சாகுல்ஹமீது தலைமை வகித்தார். இதில், கலந்து கொண்டு தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மாநிலத் தகவல் ஆணையர் பிரதாப்குமார் பேசியதாவது: தகவல் அறியும் உரிமை சட்டத்தில் என்ன உள்ளது என்பதை, அனைவரும் அறிந்திருக்க வேண்டும். மாவட்டத்தின் அனைத்து தகவல்களையும் கலெக்டர் தரமுடியாது. ஆகவே அவர்களுக்கு கீழுள்ள வருவாய் அலுவலர், கோட்டாட்சியர், வட்டாட்சியர், துணை வட்டாட்சியர் ஆகியோர் அவரின் பிரதிநிதியாக செயல்படலாம்.
அதாவது கலெக்டரின் பணியை பிரித்துக் கொள்கிறோம். மனு கிடைக்கப்பெற்ற 30 நாட்களுக்குள், பொதுத்தகவல் அலுவலர் மனுதாரருக்கு தகவல் அளிக்க வேண்டும். மனு கிடைக்கப்பெற்ற 30 நாட்களுக்குள் மேல்முறையீட்டு அலுவலர், மனுதாரருக்கு தகவல் வழங்க வேண்டும். தன்னிடம் தகவல் இல்லை என்றால், தகவல் இருக்கும் பொது அதிகார அமைப்புக்கு மனு பெற்ற 5 நாட்களுக்குள் மாறுதலில் அனுப்ப வேண்டும். 29 துறைகள் தொடர்பாக நாம் தகவல் அளிக்கலாம். இதில் அலுவலர்கள் குறைந்தபட்சம் 5-6 துறைகளுக்கு, அடிப்படை தகவல்களை அவசியம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். எந்தவொரு மனுதாரர் எழுப்பும் கேள்விக்கு முறையாக பதில் அளிக்கவில்லையென்றால், அவர்கள் அடுத்த முறை 10 முதல் 100 கேள்விகள் எழுப்புவார்கள். ஆகவே அவர்கள் கேட்டுள்ள விவரங்களை முறையாக தெரிவிக்க வேண்டும். வருவாய் மற்றும் ஊரக வளர்ச்சி முகமைத்துறைகளின் கீழ் தான் அதிகமான தகவல்கள் கேட்கப்படுகிறது என்றார்.