ஈரோடு, பிப். 25: ஈரோடு மாவட்ட கலெக்டர் கதிரவன் கூறியுள்ளதாவது: தென்னை மற்றும் பாக்கு மரங்களில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ என்ற பூச்சிகளின் தாக்குதல் சமீபத்தில் மாவட்டத்தில் அதிகரித்துள்ளது. வயது முதிர்ந்த பெண் வெள்ளை ஈக்கள் மஞ்சள் நிற முட்டைகளை சுழல் வடிவ அமைப்புகளின் ஓலைகளின் அடியில் இடுகிறது. குஞ்சுகளும், முதிர்ந்த ஈக்களும் தென்னை மற்றும் பாக்கு மரங்களின் ஓலைகளில் அடியில் இருந்து கொண்டு சாற்றை உறிஞ்சுவதோடு தேன் போன்ற திரவ கழிவுகளையும் வெளியேற்றுவதால் கீழ்மட்ட அடுக்கில் உள்ள ஓலைகளின் மேற்பரப்பில் கரும்பூசணம் படர்ந்து காணப்படும். வெள்ளை ஈக்கள் குறித்து விவசாயிகளுக்கு வெள்ளை ஈக்கள் மேலாண்மை முறைகள் குறித்த விழிப்புணர்வு முகாம்களும் நடத்தப்படுகிறது. மஞ்சள் நிறம் வளர்ச்சியடைந்த வெள்ளை ஈக்களை கவரும் தன்மையுடையதால் மஞ்சள் நிற பாலீத்தின் தாள்களில் ஆமணக்கு எண்ணெய் தடவிய ஒட்டு பொறிகளை ஆங்காங்கே கட்டி வைத்து வெள்ளை ஈக்களை கவர்ந்து அழிக்கலாம.