பவானி, பிப். 25: பவானி கூடுதுறை காவிரி ஆற்றில் தண்ணீர் குறைந்த அளவே செல்வதால், புனித நீராட பக்தர்கள் எல்லை தாண்டி செல்கின்றனர். இதனால் நீரில் மூழ்கி உயிரிழக்கும் அபாயம் உள்ளது. காவிரி ஆற்றில் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் மிகக்குறைந்த அளவே திறக்கப்படுவதால், ஆங்காங்கே வறண்டு போய் பாறைகளாக காட்சியளிக்கிறது. ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறையில் காவிரி ஆற்றுடன் பவானி ஆறு கலக்கிறது. மேலும், இங்கு கண்ணுக்குப் புலப்படாத அமுத நதியும் காவிரியுடன் சங்கமிப்பதாக கூறப்படுகிறது. இதனால், மூன்று நதிகள் சங்கமிக்கும் கூடுதுறை புகழ்பெற்ற பரிகார தலமாகவும், புண்ணிய தலமாகவும் விளங்கி வருகிறது. தற்போது பவானி மற்றும் காவிரி ஆறுகளில் தண்ணீர் இல்லாததால், ஆங்காங்கே தண்ணீர் தேங்கி குட்டை போன்று காட்சி அளித்து வருகிறது. இதனால், புனித நீராட வரும் பக்தர்கள், பரிகார வழிபாட்டுக்கு வரும் பக்தர்கள் தண்ணீரைத் தேடி காவிரி ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்று வருகின்றனர்.