பழநி, பிப். 25: பழநி வையாபுரி குளத்தில் உள்ள அமலை செடிகளை அகற்ற வேண்டுமென எஸ்டிபிஐ கட்சியினர் தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர். பழநியில் எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் கைசர் அலி தலைமை வகித்தார். மாவட்ட பொது செயலாளர் முபாரக்அலி, மாவட்ட துணை தலைவர் தமிமுன் அன்சாரி, மாவட்ட செயலாளர் சதாம் உசேன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொருளாளர் நிஜாமுதீன் வரவேற்று பேசினார். கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது. இதன்படி சட்டமன்ற தொகுதி தலைவராக அக்பரி அலி, தொகுதி செயலாளராக ஹாஜா உசேன், தொகுதி பொருளாளராக ஆரிப்தீன், நகர தலைவராக கலீல் ரகுமான், செயலாளராக மன்சூர் ரகுமான், பொருளாளராக இக்பால் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
மேலும் ஆயக்குடி, நெய்க்காரப்பட்டி பேரூராட்சிகளின் நிர்வாகிகளும் தேர்வு செய்யப்பட்டனர். கூட்டத்தில் பழநியில் உள்ள 33 வார்டுகளிலும் தெரு விளக்குகள் எரிவதில்லை. உடனடியாக விளக்கு எரிய வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பழநி வையாபுரி குளத்தில் உள்ள அமலை செடிகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். கோடை காலங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். பழநி நகரில் சாக்கடைகள், குப்பைகளை உடனடியாக அள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட துணை தலைவர் தமீமுன் அன்சாரி நன்றி கூறினார்.