திண்டுக்கல், பிப். 25: திண்டுக்கல் வாசவி மெட்ரிக் பள்ளி, மாவட்ட கால்பந்து கழகம் இணைந்து மாவட்ட அளவிலான 2வது ஆண்டு ஐவர் கால்பந்து போட்டிகள் கடந்த பிப்.18ம் தேதியில் இருந்து பிப்.20ம் தேதி வரை நடந்தது. 11 வயது, 14 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கான இப்போட்டியை மாவட்ட கால்பந்து கழக தலைவர் சுந்தரராஜன் துவங்கி வைத்தார். ஒவ்வொரு பிரிவிலும் 16 அணிகள் கலந்து கொண்டன. 11வயதுக்குட்பட்ட இறுதி போட்டியில் திண்டுக்கல் அச்யுதா மெட்ரிக் பள்ளியும், வத்தலக்குண்டு அன்னை வேளாங்கண்ணனி பள்ளியும் மோதின.
இதில் டை பிரேக்கரில் 1:0 என்ற கோல் கணக்கில் அச்யுதா பள்ளி முதலிடம் பெற்றது. 14 வயதுக்குட்பட்ட இறுதி போட்டியில் வத்தலக்குண்டு அன்னை வேளாங்கண்ணி பள்ளியும், திண்டுக்கல் வாசவி மெட்ரிக் பள்ளியும் மோதின. இதில் அன்னை வேளாங்கண்ணி பள்ளி 4.0 என்ற கோல் கணக்கில் முதலிடம் பிடித்தது. வெற்றி பெற்ற அணிகளுக்கு திண்டுக்கல் டிஎஸ்பி மணிமாறன் கோப்பை, சான்றிதழ்களை வழங்கினர். மாவட்ட கால்பந்து கழக செயலாளர் சண்முகம், பள்ளி தாளாளர் தர் வாழ்த்துரை வழங்கினர். இதில் பள்ளி ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.