கணவர் தட்டிக் கேட்டதால் மனைவி தூக்கில் தற்கொலை

புதுச்சேரி,  பிப். 25: மேட்டுப் பாளையத்தில் சாப்பாடு விஷயத்தில் அலட்சியமாக இருந்ததை  கணவர் தட்டிக் கேட்டதால் விரக்தியடைந்த மனைவி தூக்குபோட்டு தற்கொலை  செய்தார். இதுதொடர்பாக தாசில்தார் விசாரணை நடைபெற்று வருகிறது. புதுவை,  சண்முகாபுரம், நிலைய வீதியைச் சேர்ந்தவர் பிரகாஷ் (31). இவர் நகர பகுதியில்  உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை செய்து வருகிறார்.  இவருக்கு 3 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி பரமேஸ்வரி (29) என்ற  மனைவியும், ஒரு வயதில் மகனும் உள்ளனர். சமீபகாலமாக குழந்தையை கவனிப்பதில்  பரமேஸ்வரி அக்கறை காட்டாமல் அலட்சியமாக இருந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று மதியம் சாப்பாட்டிற்காக வீடு திரும்பிய கணவர், உணவு விஷயத்தில் குறைபாடுகளை மனைவியிடம் சுட்டிக் காட்டிவிட்டு சாப்பிடாமல் வேலைக்கு சென்று  விட்டாராம். இதனால் மனமுடைந்த பரமேஸ்வரி,  புடவையால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

குழந்தை அழும்  சத்தம் கேட்டு அங்குவந்த அக்கம்பக்கத்தினர், பரமேஸ்வரி தூக்கில் பிணமாக  தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுபற்றி மேட்டுப்பாளையம் காவல்  நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். எஸ்ஐ பிரியா தலைமையிலான போலீசார்,  பரமேஸ்வரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும்  அவரது சாவுக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.இதனிடையே பரமேஸ்வரிக்கு திருமணமாகி 3 வருடமே ஆவதால் வரதட்சணை கொடுமையால்  அவர் தற்கொலை செய்தாரா? என்பது தொடர்பாக தாசில்தார் விசாரணையும் நடைபெற்று  வருகிறது.

Related Stories: