கள்ளக்குறிச்சி, பிப். 25: கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள் தின பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நேற்று நடத்தது. கள்ளக்குறிச்சி ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சங்கீதா தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது. சார் ஆட்சியர் காந்த், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சரவணன், மாவட்ட திட்ட அலுவலர் (பழங்குடியினர் நலம்) பிரகாஷ்வேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 6 தாலுகாவுக்கு உட்பட்ட பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் குறித்து மனுக்கள் வழங்கினர். மாற்றுத்திறனாளிகள் கூட்ட நெரிசலில் நடந்து செல்ல முடியாத காரணத்தால் குறைகேட்பு கூட்டம் வெளியே தனியாக பந்தல் அமைத்து அதில் மாற்றுத்திறனாளிகளை அமர வைத்து இருந்தனர். மாவட்ட வருவாய் அலுவலர், முதலாவதாக மாற்றுத்திறனாளிகளிடம் நேரடியாக சென்று மனுக்களை பெற்றுக்கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அதனை தொடர்ந்து பொதுமக்கள் நேரடியாக மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு அளித்தனர். மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட வருவாய் அலுவலர், சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகளை நேரில் அழைத்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார். நேற்று நடந்த குறைகேட்பு கூட்டத்தில் பொதுமக்கள் 394 பேர் மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு அளித்தனர். இந்த குறைகேட்பு கூட்டத்தில் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, பொதுப்பணித்துறை, காவல் துறை, கல்வித்துறை, சுகாதாரத்துறை, நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட பல்வேறு துறைகளை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.