கடலூர், பிப். 25: கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் பண்ருட்டி வட்டம் அண்ணாகிராமம் ஒன்றியம் அக்கடவல்லி கிராம பொதுமக்கள் ஆரா அமுதன் மற்றும் பலர் வழங்கிய மனுவில் கூறியிருப்பதாவது: பண்ருட்டி வட்டம் அண்ணாகிராமம் ஒன்றியம் அக்கடவல்லி பஞ்சாயத்தில் பல கட்டுமான பணியில் முறைகேடு நடந்துள்ளது. தனிநபர் கழிவறை, இறந்தவர்கள், ஊரில் இல்லாதவர்கள் பெயரில் முறைகேடு நடைபெற்றுள்ளது. இதுபோன்று மரக்கன்று நடுதல், வாட்டர் டேங்க் மோட்டார் சர்வீஸ் செய்வதிலும், தேசிய ஊரக வேலை வாய்ப்பில் பல லட்சத்திற்கு மேல் முறைகேடு நடந்துள்ளது.
பசுமை வீடு திட்டம், ஊரக வேலை வாய்ப்பு திட்டம், தானே புயல் வீடு கட்டும் திட்டம், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம் இவை அனைத்திலும் ஊழல் செய்யப்பட்டுள்ளது. எனவே அக்கடவல்லி ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்டுள்ள அனைத்து திட்டப் பணிகள் இதுபோன்று மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள் தொடர்பாக தணிக்கை செய்து சட்ட ரீதியான நடவடிக்கை எடுத்து முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.