×

காஞ்சிபுரம் பச்சையப்பன் மகளிர் கல்லூரியில் பெண்களுக்கான தற்காப்பு விழிப்புணர்வு பயிற்சி

காஞ்சிபுரம், பிப்.21: காஞ்சிபுரம் பச்சையப்பன் மகளிர் கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் சார்பில் பெண்களின் பாதுகாப்புக்கு தற்காப்பு கலை குறித்த விழிப்புணர்வு பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. கல்லூரி முதல்வர் ஸ்ரீமதி ராமலிங்கம் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் கலைச்செல்வி வரவேற்றார். இஷின்ரியூ கராத்தே பயிற்சி பள்ளி பயிற்சியாளர் நூர் முகமது மற்றும் அவரது குழுவினர் தற்காப்புக் கலைகள் குறித்து விளக்கி, செயல்விளக்கம் அளித்தனர்.

இதில், பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகள் பொது இடங்கள், பஸ்களில் செல்லும்போது பாதுகாப்புடன் எப்படி செல்வது, பாலியல் சீண்டல், தொல்லைகள் ஏற்பட்டால் எப்படி சமாளித்து தற்காத்து கொள்வது என விழிப்புணர்வு பயிற்சி அளித்தனர். பயிற்சியில் பச்சையப்பன் மகளிர் கல்லூரி மாணவிகள் 350க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் கலந்துகொண்டு, தற்காப்பு கலைகள் குறித்து அறிந்ததுடன், செய்முறைப் பயிற்சியிலும் ஈடுபட்டனர். முடிவில் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் உதயநிலா நன்றி கூறினார்.

Tags : Women ,Kanchipuram ,Bachiappan Women's College ,
× RELATED பட்டா வழங்கக்கோரி கலெக்டரிடம் கிராம மக்கள் மனு