மாமல்லபுரம், பிப்.21: மாமல்லபுரம் இசிஆர் சாலையில் சென்டர் மீடியன் வளைவில் தடுப்புகள் அமைக்கப்பட்டதால், வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் மாமல்லபுரத்தில் இருந்து சென்னை செல்லும் சாலையில் இடதுபக்கம் தமிழ்நாடு அரசு சுற்றுலா வளர்ச்சி கழகத்துக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் உள்ளது. மாமல்லபுரம் - கோவளம் இடையே கிழக்கு கடற்கரை சாலையில் இந்த ஒரே ஒரு அரசு பெட்ரோல் பங்க் மட்டுமே உள்ளது. தனியார் பெட்ரோல் பங்க் எதுவும் இந்த இடைப்பட்ட கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள எந்த பகுதியிலும் கிடையாது. சென்னையில் இருந்து மாமல்லபுரம் வரும் பயணிகள் இங்கு சுற்றிப் பார்த்துவிட்டு, மீண்டும் சர்வீஸ் சாலை வழியாக சென்று இந்த அரசு பெட்ரோல் பங்கில் பெட்ரோல் டீசல் நிரப்பி கொண்டு, மீண்டும் இடது பக்கம் செல்வதற்காக அங்குள்ள சென்டர் மீடியன் வளைவு பகுதி வழியாக கடந்த பல ஆண்டுகளாக சென்னை செல்வது வழக்கம்.
கடந்த சில மாதங்களுக்கு முன் இந்த வளைவுப் பகுதியை போலீசார், தடுப்புகள் வைத்து அடைத்து விட்டனர். இதனால் இந்த பங்கில் பெட்ரோல் நிரப்பி கொண்டு செல்லும் சுற்றுலா பயணிகள் சிலர், வலதுபக்கமாக தவறான பாதையில் தேவனேரி வரை 2 கி.மீ தூரம் சென்று அங்குள்ள வளைவு பகுதியை கடந்து மீண்டும் இடதுபக்கம் வழியாக சென்னை செல்ல வேண்டிய அவலநிலை உள்ளது. இதனால் தவறான பாதையில் கார்களில் செல்லும் சுற்றுலாப் பயணிகள் சிலர் விபத்துக்களில் அடிக்கடி சிக்கி காயமடைகின்றனர். அதேபோல் சென்னையில் இருந்து கார்களில் வந்து கடற்கரை ரிசார்ட்களில் தங்கும் சுற்றுலா பயணிகள், மீண்டும் சென்னை செல்ல மாமல்லன் சிலை அல்லது தேவனேரி வரை சென்று வளைவு பகுதிகளை கடந்து செல்ல வேண்டிய அவல நிலையும் உள்ளது. எனவே, மாமல்லபுரம் போலீசாரும், போக்குவரத்து போலீசாரும், சுற்றுலா வளர்ச்சி கழக பெட்ரோல் பங்க் அருகில் சென்டர் மீடியனில் தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்ட வளைவு பகுதியை திறந்து மீண்டும் வாகன போக்குவரத்துக்கு வழிவகை செய்ய வேண்டும் என சுற்றுலாப் பயணிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.